20 Years Experience Helped in Winning Amazon Kindle 2019 Competition

அமேசன் கிண்டில் போட்டி 2019ல் முதல் பரிசு பெற்ற கதை
இடம் : முதலிடம்

-oOo-

போட்டியின் கடைசி நாளன்று புத்தகம் வெளியிட்டு இரண்டே வாரங்களில் புருனோ எப்படி முதல் கட்டத்தில் வென்று அடுத்த கட்டம் சென்றார் என்று பலரும் கேட்கிறார்கள் ? என்னிடம் யாரும் நேரடியாக கேட்கவில்லை என்பதால் இது குறித்து பதில் கூறவேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் ரவியும், சென்னும் அனைவரையும் ஒன்று போல் நடத்தவில்லை என்றும் சிலரது புத்தகங்களுக்கு மட்டும் உதவினார்கள் என்று அவர்கள் மேல் குற்றச்சாட்டு வந்ததால் சில விஷயங்களை பொதுவில் கூறலாம் என்று நினைக்கிறேன். எனவே சிறு வரலாறு

பி.எஸ்.என்.எல் இணைய இனைப்புடன் இலவசமான வந்த சிறு இணைய இடத்தில் தான் (வெப் ஹோஸ்டிங் ஸ்பேஸ்) நான் முதலில் எனது வலைத்தளத்தை நடத்தினேன். அந்த காலத்தில் எனக்கு எச்.டி.எம்.எல் தெரியும். அதன் மூலம் தளத்தை கட்டமைத்தேன். அத்துடன் யாகூ வழங்கிய ஜியோசிட்டீசிலும் சில கோப்புகள் இருந்தன.

ஒருமுறை அகில இந்திய பட்டமேற்படிப்பு நுழைவுத்தேர்வு முடிந்தவுடன் அந்த கேள்விகளுக்கான விடையை விரிவாக என் தளத்தில் எழுதினேன். அதாவது என்ன விடை, இது எந்த நூலில் உள்ளது, இது குறித்து அடிப்படை விபரங்கள் என்ன, இந்த ஒரு விடை சரி என்றால் ஏன் மீதி மூன்று விடைகளும் தவறு. மேலும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளனவா, இந்த கேள்வி எதாவது ஒரு நூலில் மட்டும் உள்ளதா, எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ள உத்திகள் (நிமோனிக்ஸ்) என்ன என்று விரிவாக என் தளத்தில் எழுத ஆரம்பித்தேன்

அதுவரை நுழைவுத்தேர்வு நூல்களில் கேள்வி மற்றும் அதற்கான விடை ஏ,பி,சி,டி இருக்கும். அது எந்த நூலில் உள்ளது போன்ற விபரங்கள் இருக்காது. எனவே நான் எழுதிய பாணி வெற்றி பெற்றது. அது என்ன பாணி என்று அறிய மறுமொழிகளில் சுட்டி 1 பார்க்கவும். வரவேற்பு அதிகரிக்கவே TargetPG (மறுமொழிகளில் சுட்டி 2) என்ற வலைத்தளத்தை வாங்கி, அதில் வோர்ட்பிரசை நிறுவி தளம் நடத்தினேன்.

அந்த நேரம் கூகிளும் ப்ளாக்கர் என்ற சேவையை வழங்கியது. வோர்ட்பிரஸ் அனுபவம் இருந்தால், கூகிளில் doctorbruno.blogspot.com என்று ஒரு கணக்கு துவங்கி அதில் என் வலையுலக பயணம் துவங்கியது. மருத்துவ பட்டமேற்படிப்பு குறித்த விபரங்கள் TargetPG comமிலும், பிற விபரங்கள் doctorbruno.blogspot.comமிலும் வந்து கொண்டிருந்தன

TargetPG com தளத்தில் ஒரு பக்கத்தை ஏற்றிபிறகு, அது குறித்து யாராவது தேடினால் என் தளத்தின் பக்கம் கூகிளில் வர சில நாட்கள் ஆனது. அதே நேரம் doctorbruno.blogspot.comமில் நான் எழுதுவும் விஷயம் சில மணிநேரங்களிலேயே கூகிளில் வந்தது. ஏனென்றால் BLOGSPOTல் இருக்கும் தளங்களை கூகிள் முதலில் இண்டெக்ஸ் செய்து யாராவது தேடினால் உடனே நம் தளம் தேடலுக்கான விடைகளில் வந்தது என்பதை இரு தளங்களின் StatCounter புள்ளிவிபரங்கள் கற்றுத்தந்தன. எனவே TargetPG net என்ற தளத்தை துவங்கி ப்ளாக்கரின் எப்.டி.பி மூலம் நமது வழங்கியில் வலைத்தளத்தை பதிப்பிக்கும் சேவை மூலம் உடனுக்குடன் செய்திகள் போட பயன்படுத்தினேன். பிறகு DNS சேவை வந்தபிறகு, இந்த தளம் கூகிளில் வழங்கிகளிலேயே இருந்தது. பிறகு www mcqsonline com www pgmed org www medicalbooks in போன்று பல தளங்கள் சேர்ந்தன.

AIIMS, PGI Chandigarh, JIPMER, தமிழ்நாடு அரசு மருத்துவ பட்டமேற்படிப்பு நுழைவுத்தேர்வு போன்ற தேர்வுகளின் முடிவு வந்த உடன், அந்த கோப்பை என் தளத்தில் ஏற்றுவது வழக்கம். அப்பொழுது எல்லாம் தரவு நிலையங்கள் (டேட்டாசெண்டர்) அவ்வளவு பிரபலமாகாத நேரம். மருத்துவ பட்டமேற்படிப்பு தேர்வுகள் நடத்துபவர்கள் (கல்லூரிகள், பல்கலைகழகங்கள், தேர்வு குழுக்கள்) எல்லாம் அவர்கள் அலுவலகத்தில் இருக்கும் வழங்கியையே பயன்படுத்துவார்கள். தேர்வு சமயத்தில் ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர் தொடர்பு கொள்வதால் வழங்கி எல்லாம் தொங்கிவிடும். ஆனால் www targetpg net கூகிள் வழங்கியில் இருந்ததால் தொங்காது   எனவே முடிவு வரும் நாளன்று கண்கொத்தி பாம்பு போல் காத்திருந்து முடிவு வந்த உடன், அந்த கோப்பை தரவிரக்கி, என் தளத்தில் ஏற்றி விடுவேன். பலமுறை முடிவு வெளியான தளம் “தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்டு”   இருக்கும் போது www targetpg netல் மட்டும் முடிவுகள் தெரியும்.

(பிற்காலத்தில் தமிழக அரசின் உறுப்பு மாற்று அறுசை சிகிச்சை தொடர்பான முக்கியமான தரவு தளத்தை நடத்தும் பொறுப்பு என்னிடம் வந்தது. பல வருடங்கள் நான் நடத்தினேன். யாராலும் கொந்த (ஹேக் செய்ய) முடியவில்லை. யானை வித்தை குதிரை வித்தை எதுவும் பலிக்கவில்லை. தரவு தளம் இருந்தது கூகிள் டிரைவில். கூகிள் இது போல் பல வசதிகளை தந்தது, தருகிறது. ஆனால் பலரும் அதை பயன்படுத்துவது இல்லை.)

இப்படியாக www targetpg net பிரபலமானது. பிறகு www.targetpg.comம் www.targetpg.netம் சேர்ந்து www targetpg in (மறுமொழிகளில் சுட்டி 3) ஆனது. ஆரம்ப கட்டத்தில் அது புளோரசண்ட் பச்சை, பிங்க், மஞ்சள் என்றெல்லாம் இருந்தது. 2010க்கு பிறகு தனசேகர் நிறத்தை மாற்ற சொன்னதான் தளத்திற்கு கொஞ்சம் டீசண்ட் லூக் வந்ததும், 2013ல் ரவி தளத்தை வேகமாக மாற்றித்தந்ததும் வரலாறு.

நான் சன்சார்நெட் தளத்தில் கேள்விகளுக்கான பதிலை எழுத துவங்கிய காலத்தில் ஒரு முறை ஒருவர் அலைபேசினார். (தளத்தில் என் அலைபேசி எண் இருந்தது) நான் விடைகளை எழுதும் முறை நன்றாக இருக்கிறது என்றும் அந்த வருட வினாத்தாளில் இருக்கும் 300 கேள்விக்களுக்கும் அது போல் எழுதி தர முடியுமா என்றும் கேட்டார். சரி என்று சொன்னேன். உடனே குறுஞ்செய்தியில் என் முகவரி கேட்டார், அனுப்பினேன். நன்றி JP Vij என்று பதில் வந்தது. அதை விட்டு விட்டேன்.

இரண்டு நாட்கள் கழித்து கூரியர் ஒன்று டெல்லி Jaypee Publishersல் இருந்து வந்தது. பிரித்து பார்த்தால் அகில இந்திய நுழைவுத்தேர்விற்க்கான நூல் பதிப்பிக்கும் ஒப்பந்தம்.

ஜேப்பி பிரதர்ஸ் என்பது மருத்துவ நூல்களை மட்டுமே பதிப்பிக்கும் நிறுவனம். முதல் வருடம் உடற்கூறியல் (அனாடமி) படிக்கும் இந்தர்பிர் சிங் நூலில் இருந்து, இரண்டாம் வருடம் மருந்தியல் (பார்மக்காலஜி) கே.டி.திரிபாதி, நோய்க்குறியியல் (பதாலஜி) ஹார்ஷ் மோகன் என்று மருத்துவக்கல்லூரியில் பாட நூல்களாக உள்ள பாதி நூல்கள் அவர்கள் நூல்கள் தான். அங்கு நூலை பதிப்பிக்கும் வாய்ப்பு என்பது அந்த காலத்தில் நினைத்து பார்க்கவே முடியாத ஒன்று. அதை விட முக்கியம் அந்த நிறுவனத்தின் சேர்மன் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டது. வழக்கமாக அது போன்ற சர்வதேச பதிக்கங்களில் மருத்துவ நூல்களை பதிப்பிக்க வேண்டுமென்றால் முதலில் விண்னப்பிக்க வேண்டும். பிறகு அவர்களின் சென்னை அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொள்வார்கள். ஒரு படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பி, பிறகு ஓரிரு அத்தியாயங்களை எல்லாம் அனுப்பி என்று மிகப்பெரிய நடைமுறை உள்ளது. இது எதுவும் இல்லாமல் எனக்கு நேரடியாக வாய்ப்பு கிடைத்தது.



அப்பொழுது நான் மதுரையில் இருந்தேன். மடிக்கணினி எல்லாம் இல்லாத காலம். கணினி இருந்தது வீட்டில். ஆனால் நூல் எழுத வேண்டுமே. தினமும் மருத்துவமனை பணி முடிந்த பிறகு மதுரை மருத்துவக்கல்லூரி நூலகம் சென்று குறிப்புகளை எழுதுவேன். பிறகு மாலை தமிழ்நாடு பொது தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தேர்விற்கு நண்பர்களுடன் படிப்பு. பிறகு சாப்பிட்டு விட்டு குட்டித்தூக்கம். பிறகு 2 மணிக்கு வண்டியை எடுத்து விட்டு, பெரியார் நிலையம் அருகில் இருக்கும் ஒரு இணைய உலாவி கடையில் (அந்த கடை 24 மணி நேரம் திறந்திருக்கும்) 6 மணிவரை அமர்ந்து குறிப்பெடுத்த விபரங்களை அடித்து விட்டு, அதை என் மின்னஞ்சலுக்கு அனுப்பிவிட்டு (அப்பொழுது பென் டிரைவ் கிடையாது) மீண்டும் விடுதி வந்து குளித்து விட்டு வார்டிற்கு சென்று, அறுவை அரங்கிற்கு சென்று, நூலகம் சென்று என்று வாழ்க்கை ஓடிக்கொண்டே இருந்தது.

ஞாயிறு வீட்டிற்கு செல்லும் போது, அந்த வாரம் அடித்த விஷயங்களை எல்லாம் தொகுத்து இப்படியாக ஒரு ஆறு வாரத்தில் நூலை தயார் செய்து அனுப்பினேன். பின்னர் அங்கிருந்து புரூப் ரீடிங் காபி எடிட்டிங் செய்து வந்தது. பிறகு படங்கள். இறுதியாக நூல் வந்தது. வந்தவுடன் விற்றது. அப்பொழுது எல்லாம் கோட்டயம் போன்ற இடங்களில் மாணவர்கள் மொத்தமாக அமர்ந்து படிப்பதால், ஒரு நூல் பிடித்திருந்தால் உடனே அனைவரும் வாங்கி விடுவார்கள்.



தமிழ் நாடு தேர்வாணய தேர்வு முடிந்து நான் அரசு பணியில் சேர்ந்தவுடன், நான் தேர்விற்கு தயார் செய்த குறிப்புகளை தொகுத்து நூலாக வெளியிட்டேன். இன்று வரையில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக அது தான் நம்பர் ஒன். பிறகு தமிழ்நாடு பட்டமேற்படிப்பு நுழைவுத்தேர்விற்கான நூல் வெளியிட்டேன்

நுழைவுத்தேர்வு நூல்களில் கேள்வி மற்றும் அதற்கான விடை ஏ,பி,சி,டி என்றூ மட்டுமே இருந்த, விடை எந்த நூலில் உள்ளது போன்ற விபரங்கள் இல்லாக ஒரு காலகட்டத்தில் இருந்து, விரிவான விளக்கங்களை மறுமொழிகளில் சுட்டி 1 பாணியில் மாற்றியது தான் நான் பெற்ற வெற்றிகளுக்கு காரணம். அதன் பிறகு தான் மருத்துவ பட்டமேற்படிப்பு நூல்கள் விரிவான விளக்கத்துடன் வந்தன. அடுத்து இது போல் மருத்துவ பாடத்தில் உள்ள விளக்கங்களை எல்லாம் தொகுத்து Pre PG Medical Handbook தொகுத்தேன். அதுவும் தொடர்ந்து அதிக விற்பனையானது. அதை தொடர்ந்து ஒவ்வொரு பாடத்திற்கும் என்று தனியாக நூல்களை பிற மருத்துவர்கள் எழுத ஆரம்பித்தார்கள். இது போல் வந்த நூல்களில் சமீபத்தில் வந்த, மருத்துவர் மாலதி முருகேசன் எழுதிய MICRONS (மறுமொழிகளில் சுட்டி 4 பார்க்கவும்) அருமையாக உள்ளது. தற்சமயம் எம்.பி.பி.எஸ் படிப்பவர்கள் கட்டாயம் வாசிக்கவும் பிறகு ஒவ்வொரு ஊரிலும் வகுப்பு எடுக்க ஆரம்பித்தார்கள், ஆனால் விதை நான் போட்டது (தேவர் மகன் மாடுலேஷனில் வாசித்துக்கொள்ளவும்)

இளம் மருத்துவர்களுக்கான Receptor என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இருந்தேன். 2004 ஆண்டே என் வலைத்தளங்களில் நூல்களை விற்க துவங்கிவிட்டேன். மணிஆர்டர், செக் மூலம் பணம் செலுத்தினால் வீட்டிற்கு கூரியர் மூலம் நூல்களை அனுப்பினேன். 2007ல் எனது தளம் இப்படித்தான் இருந்தது. மறுமொழிகளில் சுட்டி 5 பார்க்கவும்

எனது நூல்களில் உள்ள விபரங்களை – அதாவது ஒவ்வொரு கேள்விக்கும் உள்ள பதில்களை – எனது தளங்களில் வெளியிட்டு, யாராவது கூகிளில் அந்த கேள்வியை அல்லது அந்த பதில் குறித்து தேடினால் அவர்கள் என் தளத்திற்கு வந்து அதன் பிறகு அங்கு என் நூலின் விளம்பரத்தை பார்த்து அதை வாங்குவார்கள். இதற்காக 2001 முதல் 2008 வரை கிட்டத்தட்ட 10000 பக்கங்களை சுமார் 25 தளங்களில் உருவாக்கினேன்.

இது தவிர PHPBB மென்பொருள், PHP Nuke மென்பொருளில் சில தளங்களை நடத்தி அங்கு எல்லாம் மருத்துவ மாணவர்கள் விவாதம் செய்ய வழி வகை செய்தேன். யாகூ, கூகிள் மின்னஞ்சல் குழுமங்கள் ஆர்குட் குழுமங்கள் நடத்தினேன். கூகிள் இலவசமாக குறுஞ்செய்தி குழு நடத்த வசதி தந்த போது அதையும் செய்தேன். மறுமொழிகளில் சுட்டி 6 http://labs.google.co.in/smschannels/subscribe/TargetPG பார்க்கவும் இப்படி ஒரு விஷயம் இருந்தது எத்தனை பேருக்கு தெரியும் .

நான் இது வரை நான்கு பதிப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளேன். யாருமே எனக்கு ராயல்டி தராமல் இருந்ததில்லை. ஏனென்றால் என் நூல்கள் விற்றன   பல ஆயிரம் பிரதிகள் வெளிவந்த ஒரே மாதத்தில் விற்றன. இத்தனைக்கும் ஒரு நூலுக்கு கூட நான் வெளியிட்டு விழா நடத்தியதில்லை. எந்த மகாசன்னிதானமும் அங்கிகாரம் தர வேண்டி நின்றதில்லை. ஆனால் மின்னஞ்சல், மின்னஞ்சல் குழுமங்கள், வலைத்தளம், வலைப்பதிவு, ஆர்குட், விவாததளங்கள், குறுஞ்செய்தி குழு, பிறகு முகநூல் குழுக்கள் என்று அனைத்து விதங்களிலும் நூலை அறிமுகப்படுத்தினேன்.

எனது ஒரு நூல் வெளிவருவதற்கு இரு வாரத்திற்கு முன்னர் இருந்து அந்த நூலில் இருந்து சில பக்கங்களை இந்த குழுமங்கள், தளங்கள் என்று வெளியிட்டு வந்து (இன்றைய மொழியில் டீசர்) நூல் வெளியீட்டை அறிவிப்பேன். உடனே விற்று விடும். ஒரு முறை நெல்லை ஈகிள் புக் கடைக்காரர் சொன்னார். அது எப்படி சார், உங்க புக் மட்டும் வந்து இறங்கிய இரண்டாம் நாளை நூறு பேர் ஒரே நாளில் வந்து கேட்கிறார்கள். எப்படி என்று கேட்டார். “ஹிந்துலயும், தினத்தந்தியிலேயே புல் பேஜ் ஆட் சார்” என்று கூறினேன். இதற்கு பின்னால் 40 தளங்களில் உள்ள (வலைத்தளங்கள் உட்பட) 10000க்கும் மேற்பட்ட பக்கங்கள், ஒரு டஜன் யாகூ, கூகிள் குழுமங்கள், அரை டஜன் புல்லட்டின் போர்டுகள், வோர்ட்பிரஸ், PHPBB, PHP Nuke எல்லாம் பயன்படுத்துதால் கனவு கூட SELECT * FROM [targetpg_mcqsonli] WHERE [exam] = “TNPSC”; என்று வருகிறது என்று கூறினால் அவருக்கு புரியுமா



பிறகு சில விஷயங்கள் ஒரே நேரத்தில் நடந்தன

  1. 1. பிறகு முகநூல் வந்ததால் வளைத்தளங்களும், விவாத தளங்களும், மின்னஞ்சல் குழுமங்களும், குறுஞ்செய்தி குழுமங்களும் காலாவதியாகின.
  2. 2. மூளை முதுகுத்தண்டு நரம்பியல் அறுவை சிகிச்சை படிப்பில் சேர்ந்து நான் பேனா தூக்கும் நேரம் குறைந்து கத்தி தூக்கும் நேரம் அதிகரித்தது
  3. 3. திறன்பேசி வந்த பிறகு அச்சு நூல்களின் தாக்கம் குறைந்து பிடிஎப் கோப்புகளின் பயன்பாடு அதிகரித்தது

எனவே எழுத்தாளர் – ஆசிரியர் – தொகுப்பாளர் – போட்டோஷாப் நிபுணர் !! பதிப்பாளர் – இணைய விளம்பர விற்பனையாளர் புருனோ சற்றே பின் சென்றார்   2009ல் பன்றிக்காய்ச்சல் (மறுமொழிகளில் சுட்டி 7) என்ற ஒரு நூல், சில நூல்களின் மறுபதிப்பு தவிர பெரிதாக எதுவும் செய்யவில்லை. எனவே பலரும் பேலியோ எனது முதல் நூல் என்று தவறாக நினைக்கிறார்கள்

2013ல் SCRIBD என்ற இணையதளம் ஒரு சேவையை வழங்கியது. அதாவது உங்கள் நூல்களை ஒருவர் தரவிறக்கம் செய்யாமலேயே அதை அந்த தளத்தின், செயலியில் வாசிக்க உங்களுக்கு பணம் செலுத்தும் வசதி. உடனே எனது சில நூல்களை அதில் ஏற்றினேன். பணம் வந்தது. பிறகு அதே வசதியை சற்று மேம்படுத்தி அமேசான் கிண்டில் டைரக்ட் கொண்டுவந்தது. உடனே எனது சில நூல்களை கிண்டிலில் ஏற்றினேன். முதல் மாதத்தில் 8 டாலர் வந்தது.

10725988 Nov 01, 2013 – Nov 30, 2013 Amazon.com Paid Jan 23, 2014 EFT USD 8.15 62.32 INR 507.88
Sales Period Accrued Royalty Tax Withholding Net Earnings Source
Nov 01, 2013 – Nov 30, 2013 USD 1.40 USD 0.42 USD 0.98 Sales
Nov 01, 2013 – Nov 30, 2013 USD 8.55 USD 2.56 USD 5.99 Sales
Nov 01, 2013 – Nov 30, 2013 USD 1.68 USD 0.50 USD 1.18 Sales
Adjustments USD 0.00
Totals USD 8.15
மாதா மாதம் பணம் வந்து கொண்டே இருந்தது. பிறகு இந்திய ரூபாயில் வர ஆரம்பித்தது



2018ஆம் ஆண்டு போட்டி நடந்த போது தான் எனக்கு போட்டி குறித்து தெரியவந்தது. இதுநாள் வரை நான் கிண்டிலில் எழுதி பதிப்பித்திருந்தவை அனைத்துமே ஆங்கில புத்தகங்கள் மருத்துவத்துறை சார்ந்த புத்தகங்கள். எனவே தமிழ் கிண்டில் நிலவரம் குறித்து அறிந்து கொண்டு அதில் பங்கு பெற அவகாசம் இல்லை. அதனால் 2019ல் பங்கு பெறலாம் என்று முடிவு செய்தேன்.

தமிழ் கிண்டில் நிலவரம் எப்படி என்று பார்க்க எனது மூன்று நூல்களை 2019 பதிப்பித்தேன் – ஒரு சிறுகதை, ஒரு வரலாறு, ஒரு வலைப்பதிவுகளின் தொகுப்பு. இதை வைத்து நான் கற்றுக்கொண்டேன்.

இதை வைத்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று கேட்டால், முதன் முதலில் கிண்டிலில் 3 நூல்கள் வெளியிட்ட ஒருவர் அதிலிருந்து கற்றுக்கொள்ளும் அனுபவத்தை விட 20ஆண்டுகளா நூல்களை எழுதி, தொகுத்து, பதிப்பித்து, இணையம் மூலம் விற்ற என்னால் ஆயிரம் மடங்கு கற்றுக்கொள்ள முடியும்.

அதன் அடிப்படையில் ஆங்கில நூல்களுக்கு வேறு ஆசிரியர் கணக்கு, தமிழ் நூல்களுக்கு வேறு ஆசிரியர் கணக்கு என்று முடிவு செய்தேன். மேலும் இரு தமிழ் நூல்களை கிண்டிலில் போட்டு 2019 நவம்பர் தமிழ் கிண்டில் நிலவரத்தை துல்லியமாக அறிந்து கொண்டேன்.

அதன் படி எனது பேலியோ நூலை மீண்டும் எழுதினேன். போட்டியின் இறுதி நாள் வரை இருக்கும் நிலவரங்களுக்கு ஏற்றாற்போல் சில பல மாற்றங்களை செய்து டிசம்பர் 14ஆம் தேதி காலை வெளியிட்டேன். அன்று இரவு பொதுவில் முகநூலிலும் டிவிட்டரிலும் தெரியப்படுத்தினேன். டிசம்பர் 15ஆம் தேதி மாலையே இது சுட்டி 8 என்ற பிரிவில் அதிகம் விற்பனையாகும் நூல் BESTSELLER என்று வந்து விட்டது. மேலும் இந்திய அளவில் அதிக விற்பனையாகும் நூல்களில் (சுட்டி 9) 8ஆம் இடத்திற்கு வந்து விட்டது. தொடர்ந்து இந்த நூல் 20க்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் நான் சும்மா இருந்து நூல் தானாக விற்கவில்லை. நான் தொடர்ந்து வேலை செய்ததால் மட்டுமே என் நூல் விற்றது

டிவிட்டரிலும் முகநூலிலும் அறிமுகப்படுத்திய பிறகு, இரண்டு நாட்கள் கழித்து வாட்சப் சென்றேன். என்னிடம் இருந்த 20000 எண்களுக்கும் தனித்தனியே வாட்சப் அனுப்பினேன். என் நூல் விற்கவில்லை, எனக்கு மதிப்புரை வரவில்லை என்று புகார் செய்யும் யாராவது 20000 பேருக்கு வாட்சப் அனுப்பினீர்களா என்று உங்கள் மனசாட்சியை கேளுங்கள். வாங்குவேன் என்று கூறியவர்களின் எண்களை குறித்துக்கொண்டு அவர்கள் வாங்கும் வரை தொடந்து நினைவூட்டிக்கொண்டிருந்தேன். இப்படியாக 19ஆம் தேதி amazon.com வலைத்தளத்தில் தமிழில் அதிகம் விற்பனையாகும் நூல் என்ற இடத்திற்கு வந்தது

பிறகு இந்திய அமேசனின் தமிழ் பிரிவில் (சுட்டி 10) 3ஆம் இடத்திற்கு வந்து இரண்டாம் இடத்திற்கு வந்து முதலிடத்திற்கு வந்து, 30ஆம் தேதி வரை முதலிடத்தில் இருந்து, ஒரு நாள் மட்டும் கிழிறங்கி, மீண்டும் 31ஆம் தேதி முதலிடத்திற்கு வந்தது ஜனவரி 13ஆம் தேதி வரை முதலிடத்தில் இருந்தது. (அந்த ஒரு நாள் மட்டும் கீழிறங்கியதற்கு காரணம் என்னவென்று கிழே விளக்கியுள்ளேன்.)

வாட்சப் முடிந்த பிற்கு டெலிகிராம். அதன் பிறகு முகநூல் என்று தொடர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்திக்கொண்டே இருந்தேன். அதனால் தான் நூல் விற்பனையில் தொடர்ந்து முதலிடம் இருந்தது

நான் எதிர்பார்த்த எண்ணிக்கை விற்ற பிறகு இரண்டு நாட்கள் இலவசமாக அளித்து மின்னஞ்சல் கூழுமங்கள், முகநூல் குழுமங்கள் ஆகியவற்றில் தெரியப்படுத்தினேன். நான் எழுதிய குழுமங்களில் இருக்கும் உறுப்பினர்கள் மொத்தம் 20 லட்சத்தை தாண்டும். எனவே நான் எதிர்பார்த்த எண்ணிக்கையில் நூல்கள் இலவசமாக விற்றன. இலவசம் அளித்த போது ஒரு நாள் மட்டும் தான் பேலியோ நூல் முதலிடத்திலிருந்து (சுட்டி 10ல்) இறங்கியது.

போட்டியின் கடைசி நாளன்று புத்தகம் வெளியிட்டு இரண்டே வாரங்களில் புருனோ எப்படி முதல் கட்டத்தில் வென்றார் என்ற பலரும் கேட்கிறார்கள். உண்மையில் நான் எப்படி வென்றேன் என்று அறிய விரும்பினால், என்னிடம் நேரடியாக கேட்டால் பாடம் நடத்தியிருப்பேன். ஆனால் அந்த கேள்வியை கேட்கும் நபர்களின் நோக்கம், அறிவுத்தாகம் அல்ல, நக்கல் மட்டுமே. அதனால் தான் என்னிடம் கேட்காமல், மற்றவர்களிடம் கேட்கிறார்கள். நூலக ஆர்டரால் ஆயிரம் பிரதிகள் அச்சுநூல்கள் மட்டுமே எழுதியவர்களும், விற்பவர்களும், முதன் முதலில் கிண்டிலில் எழுதியவர்களும், இதை எனது முதல் நூலாக, எனது முதல் கிண்டில் முயற்சியாக நினைத்து அறியாமையால் இந்த நக்கல் கேள்வியை முன்வைக்கிறார்கள்.

உண்மையில் அவர்கள் கேட்க வேண்டிய கேள்வி, பிரபலமான தமிழ் புத்தகங்கள் பட்டியலில் தொடர்ந்து மூன்று வாரங்கள் புருனோவின் நூல் எப்படி முதலிடத்தில் இருந்தது என்பதுதான். காரணம் அப்படி முதலிடத்தில் இருந்ததால் தான் இந்த நூல் அடுத்த கட்டத்திற்கு தேர்வானது. எந்த நூல் விற்பனையில் முதலிடத்தில் இருந்துள்ளது என்பதை இவர்கள் கவனிக்கவில்லை என்பதால் தான் இந்த கேள்வியே என்பது வேறு விஷயம்

நண்பர்கள் ரவியோ, சென்னோ இல்லாமல் இந்த இடம் சாத்தியமில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன். ஆனால் ரவியும் சென்னும் எனக்கு எவ்வளவு உதவினார்களோ, அதே அளவு மற்றவர்களுக்கும் உதவினார்கள் என்பதை என்னால் கண்டிப்பாக கூற முடியும். ஒவ்வொரு நூலும் வெவ்வேறு அளவு விற்றதற்கு காரணம் அவர்களின் பாரபட்சம் அல்ல. அந்த அந்த நூலாசிரியரின் பிற நூல்கள் மற்றும் இந்த நூல் மற்றும் அவர்கள் சந்தைப்படுத்திய விதம் தான்.

தமிழ் இலக்கிய உலகில் நூல் விற்க
1. யாரவது இலக்கிய பீடம் முன்னுரை எழுத வேண்டும்
2. பணம் செலவழித்து வெளியீட்டு விழா நடத்த வேண்டும். விழா நடந்த பிறகு மதுவிருந்து வேறு தனியாக நடத்த வேண்டும்
3. புரிந்தும் புரியாமலும் இருக்கும் மொழியில் அந்த நூலிற்கு விமர்சனம் வேண்டும்
4. நூலகங்கள் அந்த நூலை வாங்க வேண்டும்

ஆனால் என் பாணி என்பது வேறு. சொல்லப்போனால் மேலே கூறிய நான்கு விஷயங்களை தவிர மீதி முறைகளில் தான் நான் கவனம் செலுத்தினேன்

இந்த அளவு விற்பனை, இந்த (மூன்று வாரங்கள்) தொடர் முதலிடம் என்பது தற்செயல் அல்ல. அதிர்ஷ்டம் உள்ளது. ஆனால் அதிர்ஷ்டம் மட்டும் காரணம் அல்ல. இதற்கு பின்னால் மின்னஞ்சல் குழுமங்கள், முகநூல் குழுமங்கள் (குழும நிர்வாகிகளுக்கு நன்றிகள்), எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் நான் அனுப்பிய 20000 வாட்சப் செய்திகள் என்று பலவும் உள்ளன. டிசம்பர் 14 முதல் ஜனவரி 1 வரை தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தேன். ஆனால் எனது செயல்பாடுகள் என்பது முற்றிலும் வெவ்வேறு தளங்களில் இருந்ததால் அது பலரது கவனத்தில் இல்லை. எனவே அவர்கள் எல்லாம் நான் எதுவும் செய்யாமலே நான் வென்றதாக நினைக்கிறார்கள்

-oOo-

சுய புராணம் போதும், அடுத்து என்ன என்று கேட்கிறீர்களா ?

முகநூலும், யூடுயுபும் எப்படி உங்களின் சிந்தனையை தாக்குகின்றன என்றும், ஒரு கருத்துடன் முகநூலில் / யூடுயுபில் நுழையும் நீங்கள் எப்படி அந்த கருத்தில் உறுதியாகிறீர்கள் (அது தவறாக இருந்தாலும் கூட) என்றும், இதனால் தற்காலத்தில் பசி, பட்டினி, நோய்கள், மரணம் அதிகரிப்பது எப்படி என்றும், இதனால் மனித குலத்திற்கு நீண்ட நாட்களில் ஏற்படும் நன்மை என்ன என்பது குறித்தும் 10 பக்கங்களில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன்

தமிழில் : ஆர்கானிக் யூஜெனிக்ஸ் : செயற்கை நுண்ணறிவும் இயற்கை மூடத்தனமும் (மறுமொழிகளில் சுட்டி 11)
ஆங்கிலத்தில் : Artificial Intelligence and Natural Stupidity: Organic Eugenics (மறுமொழிகளில் சுட்டி 12)
கதையை வாசித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
எனது அனைத்து நூல்களும் மறுமொழிகளில் சுட்டி 13ல் உள்ளன
வெற்றி பெற்ற பேலியோ நூலை வாங்க மறுமொழிகளில் சுட்டி 14 செல்லவும்

ஒரு முறை ஒரு பிரபல பாடகருடன் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது ஒருவர் அந்த பாடகரிடம் “நான் உங்கள் பாடல்களை எல்லாம் தினமும் கேட்கிறேன். எனக்கு உங்களை போல் பாடகராக வேண்டும் என்பதே லட்சியம்” என்று கூறினார். பாடகரும் பெருந்தன்மையுடன் “நல்லது தம்பி” என்று கூறினார். நான் குறுக்கே புகுந்து, “பிரதர், நீங்க சார் மாதிரி ஆகவேண்டுமென்றால் சார் பாடிய பாடல்களை மற்றும் கேட்டால் போதாது. சார் 10 வயதில் இருந்து என்ன செய்தார், எப்படி பயிற்சி செய்தார், என்னவெல்லாம் கற்றார் என்று பாருங்கள். சச்சின் மேட்சில் ஆடுவதை பார்த்தால் சச்சின் ஆகவே முடியாது. சச்சின் நெட் பிராக்டிசில் என்ன செய்கிறார் என்று பார்க்கவேண்டும்” என்று கூறினேன். பாடகர் என்னை சில நொடிகள் கூர்ந்து பார்த்தார். பிறகு புன்முறுவல் வந்தது. “ரொம்ப சிம்பிளா முடிச்சிட்டீங்க தம்பி” என்றார்.

உசேன் போல்ட் தங்கப்பதக்கம் வாங்குவது அவரது 10 நொடி ஓட்டத்திற்காக மட்டுமல்ல. அந்த பத்து நொடிகளும் ஒழுங்காக ஓட வேண்டும். அது அவசியம். ஆனால் அது மட்டும் போதாது. அந்த பத்து நொடிகளுக்கு பின்னால் இருக்கும் பல வருட தயாரிப்புகளுக்காத்தான் அந்த பதக்கம். அதே போல், பேலியோ நூல் தொடர்ந்து மூன்று வாரங்கள் விற்பனையில் முதலிடம் பெற்றது என்றால் அது இந்த நூலின் தரம், மற்றும் எனது இரு வார செயல்பாடுகளால் மட்டுமல்ல். நான் 20 ஆண்டுகளாக எழுதிய நூல்கள், நான் என் தளங்கள் மூலம் விற்ற 100க்கும் மேற்பட்ட நூல்கள், சுமார் 20 வருடங்களாக என்னை தொடர்ந்து வாசிக்கும் பல ஆயிரம் நண்பர்கள், கிண்டிலில் மட்டுமே 6 வருட அனுபவம், போன்ற பல காரணங்கள் உள்ளன.

நான் இதையெல்லாம் எழுதுவது என்னை நக்கலடித்தவர்களுக்காக அல்ல. உண்மையில் இதை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் இருந்து, ஆனால் கேட்க தயக்கத்துடன் இருக்கும் பலருக்காக

audentes Fortuna adiuvat, Fortune favours the brave என்ற கூற்றின் படி வேலை செய்தால் அதிர்ஷ்டம் வரும். வெற்றிக்கு காரணம் 1 சதம் அறிவு, 99 சதம் உழைப்பு. Genius is one percent inspiration and ninety nine percent perspiration



* 04. கிராமப்புற மருத்துவக்கதைகள் – குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையும் ஆண்மைக்குறைவும் !!

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

முன்கதை வாசிக்க

நான் : நீங்க ஏன் குடும்ப கட்டுபாடு பண்ணிக்கல
க.நா.2 : போன தடவ பண்ணும்னு நினச்சேன். ஆனா பாருங்க என் சம்சாரத்துக்கு உடம்புல தெம்பு இல்ல. ஆபரேசனெல்லாம் தாங்காது. (குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது மிக மிக சிறிய அறுவை சிகிச்சை)

நான் : அப்படில்லாம் இல்ல. அது சின்ன ஆபரேசன் தான். இங்கேயே பண்ணிக்கலாம். சாயங்காலமே விட்டிற்கு போயிரலாம்.

க.நா.2 : என் சம்சாரம் வேணாம்னு சொல்றா
நான் : சரி நீங்க பண்ணிக்கிட்டா என்ன ??
வ.வி.க : நான் கூட சார்கிட்ட கேட்கனும்னு நினைச்சேன், சார் பண்ணிக்கிட்டா இந்த சுத்துப்பட்டில எல்லாரும் பண்ணிக்குவாங்க. இப்ப நிறைய ஆம்பிளைக குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிறது இல்லை.

க.நா.2 : ஆம்பிளங்க எப்படி சார் ஆப்பரேசன் பண்ண முடியும். அது பொம்பளங்க பண்ணுரது தானே
நான் : இல்ல சார். ஆம்பிளங்களும் பண்ணலாம். பொம்பளங்களும் பண்ணலாம். பொம்பளங்க உடம்பு வீக்காயிருந்தா ஆம்பளங்கதான் பண்ணனும்.

க.நா.2 : ??
நான் : நீங்க எவ்வளவு தெம்பானவரு. நீங்க பண்ணுனா தான் நல்லது. வர 20ஆம் தேதி (பல வருடங்கள் ஆகி விட்டதால் என்ன தேதி கூறினேன் என்று ஞாபகம் இல்லை) ஏரல்ல (ஏரல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்) முகாம் இருக்கு. அன்னைக்கு வந்துருங்க

க.நா.2 : சார் என் உடம்பு அதுக்கெல்லாம் சரி வருமா.
நான் : என்ன சார் நீங்க. இந்த ஏரியாவிலேயே உங்கள மாதிரி தெம்பானவங்க யாரு சரி வாங்க பாத்துரலாம்

என்று கூறியபடியே
இரத்த அழுத்தம், இதய துடிப்பு எல்லாம் பார்த்து விட்டு , அப்படியே மருந்தகம் அழைத்து சென்று உடல் எடை பார்த்து அவரை கையோடு பின்னால் ஆய்வுக்கூடம் அழைத்து சென்று இரத்த சோதனையும் பார்த்தாகி விட்டது.

நமது க.நா.2 திருட்டு முழி முழித்து கொண்டேயிருக்கிறார்.
அதன் பிறகு

வ.வி.க.: சார் 20ஆம் தேதி வந்துருங்க. காலைல 8 மணிக்கு வந்துருங்க. இங்கெருந்து சீப்புல (ஜீப்பில்) போகலாம்

க.நா.2 : சரி சார்

அதன் பிறகு க.நா.2 ஆரம்ப சுகாதார நிலையம் பக்கம் வரவேயில்லை. (அது தானே நமக்கு வேண்டும்). எந்த பிரச்சனையும் செய்யவில்லை. சில வாரங்கள் கழிந்த நிலையில் ஒரு நாள் பள்ளிசிறார் ஆய்வு திட்டத்திற்கு சென்று விட்டு வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தேன்.  ஊரின் பேரூந்து நிறுத்தம் அருகில் உள்ள தேநீர்கடையில் (அனைத்து ஊர்களிலும் ஆலமரம் இருக்காது. பல இடங்களில் பேரூந்து நிறுத்தமும் அதன் அருகில் உள்ள தேநீர்கடையும் தான் வேலையற்ற வீணர்களின் மூளையற்ற அரட்டைக்கு ஆட்படும் இடங்கள்) ஒரு பத்து பேரிடம் தன் வீர பிரதாபங்களை கூறிக்கொண்டிருந்தார். என் நல்ல நேரம் (நம் க.நா.2 வின் கெட்ட நேரம்), என்னுடன் வட்டார விரிவாக்க கல்வியாளரும் இருந்தார்.

வாகன ஓட்டுனரிடம் வண்டியை நிறுத்த கூறிவிட்டு, அனைவரும் இறங்கி விட்டோம்.

நான் : சார் நல்லாயிருக்கீங்களா
க.நா.2 : நல்லாயிருக்கேன். வீட்ல கொஞ்சம் அவசர வேல இருக்கு. நாம அப்புறம் பாக்கலாம. (அது நாள் வரை இந்த கும்பலை கண்டு பொது சுகாதார துறை ஊழியர்கள் தான் ஓடுவது வழக்கம். இப்பொழுதோ எங்களை பார்த்து இவர் ஓடுகிறார்)

நான் : எங்களுக்கும் வேலை இருக்கு. அது சரி. நீங்க இந்த மாசம் ஏரல்ல குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செஞ்சுக்கிறதா சொன்னீங்கல.
க.நா.2 : ….. (கூடியிருப்பவர்கள் அவரை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்)

வ.வி.க : (கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல்) அவர் மட்டும் கிடையாது. இங்க யார் யார் வீட்ல எல்லாம் பொம்பளங்க “வீக்கா” இருக்காங்களோ அவங்க விட்ட எல்லாம் ஆம்பளங்க ஆபரேசன் பண்ணுரதா தலவர் சொன்னாருல. அதான் நாங்கலே சீப்புல கூட்டிக்கிட்டு போகலாமுன்னு நினைச்சோம். அன்னிக்கு சாங்காலமே வந்துவுட்டுருவோம்

க.நா.2 உடன் இருந்தவர்களில் ஒருவர் : ஊருல எல்லாருமா சார்.
நான் : எல்லாருமுன்னு இல்ல. ஆனா நீங்களாம் ஆஸ்பத்திரி மேல ரொம்ப அக்கர உள்ளவங்க. ஆஸ்பத்திரில இருக்கிறவங்க. நாங்க உங்களுக்கு ஏதாது பண்ணனும்ல. அதான் ஏரல்ல நடக்கிற முகாமுக்கு நாங்கே உங்கள எல்லாம் சீப்புல கூட்டிகிட்டு போகலாமுன்னு

கூடியிருந்தவர்களின் பார்வை சந்தேகத்திலிருந்து கேள்வியாகிறது.

நான் : எல்லாரும் இல்ல. இரண்டு பிள்ள பெத்தவங்களல்ல வீட்டுக்காரம்மா ஆபரேஷன் பண்ணாதவங்க மட்டும் தான்
அதே நேரம் சிலரின் முகத்தில் தெளிவு (அனேகமாக இவர்களின் மனைவி ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தவராக இருக்க வேண்டும். அல்லது அவருக்கு இரண்டிற்கு குறைவான குழந்தைகள் இருக்க வேண்டும்)
நான் : சரி சார். நாங்க கிளம்புறோம். நீங்கலாம் எப்ப வேணும்னாலும் ஆஸ்பத்திரிக்கு வாங்க. நல்ல படியா ஆபரேசன் பண்ணிடலாம்
அதன் பிறகு நான் அங்கிருந்து மாற்றலாகி வரும் வரை அந்த இரு குழுக்களையும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்க்கவில்லை.
-oOo-
இது நகைச்சுவை கதை போல் தோன்றினாலும், இதன் பின் ஒரு அறியாமை ஒளிந்து கொண்டிருக்கிறது. 
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை போய்விடும் என்ற தவறான எண்ணம் படித்தவர் படிக்காதவர் என்று அனைவரிடமும் பரவியுள்ளது
இது முற்றிலும் தவறான ஒரு கருத்தாகும்
எனவே இது குறித்து நான் ஏற்கனவே எழுதியதை மறுபடியும் தருகிறேன்.

 

  1. ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility) ஒன்றா ???
  2. இல்லை என்றால் என்ன வித்தியாசம் ??
  3. கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை போய் விடுமா ??

போன்ற கேள்விகளுக்கு ஒரு சிறிய விளக்கம்

ஆண்மை என்று குறிக்கப்படுவது ஒருவர் தாம்பத்திய உறவில் ஈடுபட முடிவதை வைத்து. இதை ஆங்கிலத்தில் பொட்டன்சி (Potency) என்று கூறுவார்கள்

எனவே ஒருவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடிகிறதா இல்லையா என்பதை வைத்து, அவர்

  • ஆண்மை உள்ளவரா – பொட்டண்ட் Potent
  • ஆண்மையற்றவரா – இம்பொட்டண்ட் Impotent

என்று கூறலாம்

அதே போல் ஒருவரால் தந்தையாக முடியுமா இல்லையா என்பதை வைத்து

  • பெர்டிலிட்டி – Fertilily
  • மலட்டுத்தன்மை ஸ்டெரிலிட்டி – Sterilily

என்று பிரிக்கலாம்

இது இரண்டும் தனி தனி அம்சங்கள்

உதாரணமாக
கருப்பு, வெள்ளை என்று இரு நிறங்களையும்
பேனா, பென்சில் என்று இரு பொருட்களையும் வைத்துக்கொண்டால்

  1. கருப்பு பேனா
  2. வெள்ளை பேனா
  3. கருப்பு பென்சில்
  4. வெள்ளை பென்சில்

என்று நான்கு சாத்தியக்கூறுகள் உள்ளதை போல்

ஆண்மை, ஆண்மையின்மை, மலடு, மலடில்லை என்று பார்த்தால்

  1. ஆண்மையுள்ளவர், தந்தையாகலாம். Potent and Fertile
  2. ஆண்மை குறைவு, தந்தையாகலாம். Impotent and Fertile
  3. ஆண்மையுள்ளவர், தந்தையாகமுடியாது. Potent, but sterile
  4. ஆண்மை குறைவு, தந்தையாகமுடியாது. Impotent, Sterile

என்று நான்கு பிரிவுகள் வரும்

ஆண்மையுள்ளவர், தந்தையாகலாம்

  • இதில் தான் பெரும்பாண்மையானவர்கள் உள்ளார்கள் என்பதால் இது குறித்து பெரிதாக விளக்கம் தேவை யில்லை என்று நினைக்கிறேன்

ஆண்மை குறைவு, தந்தையாகலாம்

  • இதிலும் பலர் உள்ளனர். இந்த ஆண்மைக்குறைவு என்பது பெரிய தலைப்பு என்பதால் (வாசகர்களின் ஆதரவு இருந்தால்) சில இடுகைகள் எழுதலாம் என்று நினைக்கிறேன்.
  • இந்த பகுப்பில் இருப்பவர்களாம் தாம்பத்திய உறவில் ஈட்பட முடியாமை, சிரமம் ஆகியவை இருக்கும்
  • இதற்கு தகுந்த சிகிச்சை எடுத்தால் போதும்
  • வயகரா, சிட்டு குருவி லேகியம், அல்வா !!! ஆகியவை இங்கு உதவும்
  • இதில் பெரும்பாண்மையான நோய்களுக்கு பூரண குணமடையும் சிகிச்சை உள்ளது.

ஆண்மையுள்ளவர், தந்தையாகமுடியாது

  • இது தான் மிக முக்கியமான் விஷயம். இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்ற விபரமே நாட்டில் பலருக்கும் தெரியாது.
  • இவர்கள் தங்களிடம் குறை உள்ளது என்று தெரியாமல் இரண்டு, மூன்று என்று திருமணம் செய்து கொண்டே போவர்கள்
  • இந்த நிலைக்கு பல காரணங்கள்
  • இதில் சில நோய்களுக்கு சிகிச்சை உண்டு. சில நோயக்ளுக்கு கிடையாது
  • முக்கிய குறிப்பு : கர்ப்பத்தடை செய்து கொள்பவர்கள் இந்த வகையில் சேருவார்கள். கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை குறையாது

ஆண்மை குறைவு, தந்தையாகமுடியாது

  • இது பல காரணங்களினால் வரும் .
  • அனைத்தும் மருத்துவ பெயர்கள் என்பதால் உங்களை குழப்ப விரும்பவில்லை

ஆண்மை, பெண்மை குறித்து நான் எழுதியவை

  • ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்…… பகுதி 1
  • ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில் : பகுதி 2 : யார் ஆண். யார் பெண்
  • ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்…… பகுதி 3 : ஹைபோஸ்பேடியாசிஸ்

அடுத்து சில இடுகைகள் சினிமா பக்கம் சென்று விட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மீண்டும் பின்னொரு சமயம் வரலாம் என்று நினைக்கிறேன்

* 03. கிராமப்புற மருத்துவக்கதைகள் – நீங்க தான் சார் முன்னூதாரனம்

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

முன்கதை வாசிக்க

முதல் கும்பல் சுகாதார நிலையம் பக்கம் தலை வைப்பதில்லை என்று தெரிந்த சில வாரங்களில் அடுத்த கும்பலிலிருந்து சிலர் வர ஆரம்பித்தனர். ஆனால் அலம்பல் செய்ய வில்லை.

பிறகு ஒரு நாள் அந்த அடுத்த கோஷ்டி தலைவர் வந்தார். அவரை நாம் கதாநாயகன் 2 (க.நா.2) என்று அழைப்போம்

க.நா.2 : வணக்கம் சார். நான் தான் ___________
நான் : (அவர் பெயரை சொல்லி முடிக்கவும்) வாங்க வாங்க. நானே உங்கள வந்து பாக்கனும்னு நிசச்சேன். நம்ம ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு எல்லாமே நீங்க தான் சொன்னாங்க. அப்படித்தானே

க.நா.2 : (முகம் பிராகசமாகிறது) பிரெசிடென் எங்க சித்தப்பாதான். ஆனா அவரு வியாபாரத்த பாத்துக்கிறார். யூனியன் ஆபிஸ் (ஊராட்சி ஒன்றிய அலுவலக வேலைகள்) எல்லாம் நாந்தான் பாத்துக்கிறன்

நான் : சொன்னாங்க. நீங்க நினைச்சா இங்க நடக்காதது ஒன்னுமில்லன்னு சொன்னாங்க
க.நா.2 : நாஞ்சொன்னா யாரும் தட்டமாட்டாங்க

நான் : (அலுவலக உதவியாளரிடம்) பி.ஈ.ஈ. சார் ஆபிஸ்ல இருக்கார். அவரை கூப்பிடுங்க. அப்படியே பார்மஸில (மருந்தகம்) இருந்து இரண்டு சேர் எடுத்து போடுங்க

க.நா.2 : ????
நான் : சார் நீங்க உட்காருங்க. உங்க கிட்ட நிறய பேசனும்

அவர் வரவும். “வாங்க பி.ஈ.ஈ சார். உட்காருங்க” என்று அவரையும் அமர வைத்தாகிட்டது

பொது சுகாதார துறையில் ட்டார விரிவாக்க ல்வியாளர் என்று ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒருவர் இருப்பார். இவரை வ.வி.க என்று அழைப்போம். இந்த பதவியை ஆங்கிலத்தில் Block Extension Educator என்று அழைப்பார்கள். பல மாதங்களாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமர்ந்து டேரா போடும் நமது க.நா.2ஐ எப்படி கையாள்வது பல திட்டங்கள் ஆலோசிக்கப்பட்ட போது, இவர் அளித்த திட்டம் சிறந்தது என்று தோன்றவே அதை செயல்படுத்தினோம். அதைத்தான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.

-oOo-

(தற்சமயம் இப்பதிவை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணி புரியும் புது மருத்துவர்களும் படிப்பதால்) கதைக்கு நடுவில் சிறு மேலாண்மை வகுப்பு

எனக்கு கீழ் பணிபுரிபவர்கள் யார் என்றாலும், அவர்கள் என்ன பதவி என்றாலும் அவர்களின் பதவியுடன் சார் / மேடம் / சிஸ்டர் (செவிலியர்களை) சேர்த்தே அழைப்பது என் வழக்கம். ”எச்.ஐ சார்”, ”சி.எச்.என் சிஸ்டர்” , ”டிரைவர் சார்” என்று தான் அழைப்பேனே தவிர பெயர் சொல்லி அல்ல. (அலுவலக ரீதியாக நான் பெயரை மட்டும் சொல்லி அழைப்பது நன்கு பழக்கமான கல்லூரியில் உடன் பயின்ற மருத்துவர்களை மட்டும் தான்)

பல அரசு / தனியார் துறைகளில் / நிறுவனங்களில் வயதில் மூத்தவர் பெரிய பதவிக்கு

  • படிப்பு காரணமாக, அல்லது
  • திறமை காரணமாக, அல்லது
  • அது அவரின் தந்தை / மாமனாரின் நிறுவனம் என்பதால் !!

வருவது நடைமுறையில் அன்றாடம் நிகழும் நிகழ்ச்சி தான்.

ஆனால் இதில் சிக்கலகளும் அன்றாடம் நிகழ்கிறது. இதில் பெரும்பாண்மையான சிக்கல்களுக்கு காரணம், வயதில் மூத்தவர்களுக்கு தகுந்த மரியாதை அளிக்காதது தான்.

  • முக்கியமாக தனக்கு கீழ் பணிபுரியும் வயதில் மூத்தவர்களை பெயர் சொல்லி கூப்பிடுவது.
  • அடுத்ததாக தான் உட்கார்ந்து கொண்டு நிற்க வைத்து பேசுவது

நான் இந்த இரு விஷயங்களையும் தவிர்த்தால் தான் இன்று வரை என் பழைய பணியிடங்களில் (3 வருடம் முன் பணிபுரிந்த இடங்கள் உட்பட) நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு (உதாரணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புது கட்டிடம் திறப்பு, அல்லது பணியாளர் வீட்டு திருமணம் / பிற விசேஷங்கள்) அழைப்பு வருகிறது என்று நினைக்கிறேன்.

அலுவலில் தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் வேலை வாங்க / ஆதிக்கம் செலுத்த Reward Power, Coercive power, legitimate power, informational power, referent power, expert power என்ற பல இருக்கின்றன. அனால் இதை எல்லாம் விட்டு விட்டு கிழ் பணிபுரிபவர்களை நிற்க வைத்து பேசுவது, மரியாதை இல்லாத தோனியில் பெயர் சொல்லி அழைப்பது, விரலை நீட்டி பேசுவது என்று தங்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயல்பவர்களை பார்த்தால் எனக்கு சில நேரங்களில் எரிச்சல் வந்தாலும் பல நேரங்களில் (இவ்வளவு முட்டாளாக இருக்கிறார்களே, என்று திருந்த போகிறார்களோ என்று) பரிதாபம் தான் வரும்.

அதில் சிலர் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் இது போன்ற சேட்டைகளை (அதனால் அதில் மிகப்பெரிய நஷ்டம் காத்திருக்கிறது என்பதை அறியாமல்) எல்லாம் செய்வார்கள். அதாவது வாடிக்கையாளர் இவரை பெரிய ஆளாக நினைக்க வேண்டும் என்று. அதன் பிறகு அடுத்த முறை அந்த பணியாளர் மூலம் வாடிக்கையாளருக்கு செல்லும் செய்தியின் மதிப்பு குறைவுதான் என்பதை பலர் அறியவில்லை.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பொது மக்கள் முன்னிலையில் அவர் கீழுள்ள பணியாளரை மரியாதையாக நடத்தவில்லை என்றால், அந்த பணியாளர் அடுத்த முறை களப்பணிக்கு ஊருக்குள் செல்லும் போது அவருக்கு என்ன மரியாதை கிடைக்கும். ?? அதனால் பாதிக்கப்படுவது துறைப்பணி தானே ?? கடைசியில் யார் தலையில் அது வந்து விழும் என்று ஊகிப்பது சிரமமா ??

இது அனைத்து அலுவலகங்கள் / துறைகளுக்கும் பொருந்தும்

-oOo-

நான் : சார் இவர் நம்ம ஊர் பஞ்சாயத் பிரசிடென்ட். (அவர் தலைவர் இல்லை என்று எனக்கு நன்றாகவே தெரியும்)
வ.வி.க : ஆமாம் சார். சாருக்கு நம்ம ஊருல மட்டுமல்ல. இங்க எல்லா ஊருலயும் நல்ல செல்வாக்கு
க.நா.2 : (பெருமை வழிகிறது)

நான் : நான் கூட கேள்விப்பட்டிருக்கேன். ஆஸ்பத்திரி விசயம்னா இவர்தான் முதல்ல நிப்பாருன்னு.
வ.வி.க : ஆமாம் சார். பாதி நேரம் இங்கதான் இருப்பார்.
க.நா.2 : இது முக்கியமான விசயம்ல சார். அதான் நான் இதுல அதிகம் அக்கரையாஇருக்கேன்.

நான் : அதான் நாங்களே உங்கள பாக்க வரனும்னு நினச்சோம். ஆமாம் பசங்களாம் என்ன படிக்கிறாங்க
க.நா.2 : மூத்தவன் நான்காப்பு. (நான்காவது வகுப்பு) அடுத்த பொன்னு ஒன்னாப்பு (முதல் வகுப்பு) இப்ப மூனாவதும் பொன்னுதான். 4 மாசம் ஆகுது

நான் : நீங்க ஏன் உங்க வீட்ல குடும்ப கட்டுபாடு பண்ணிக்கல
க.நா.2 : போன தடவ பண்ணும்னு நினச்சேன். ஆனா பாருங்க என் சம்சாரத்துக்கு உடம்புல தெம்பு இல்ல. ஆபரேசனெல்லாம் தாங்காது.

நான் : அப்படில்லாம் இல்ல. அது சின்ன ஆபரேசன் தான். இங்கேயே பண்ணிக்கலாம். சாயங்காலமே விட்டிற்கு போயிரலாம்.(குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது மிக மிக சிறிய அறுவை சிகிச்சை)
க.நா.2 : என் சம்சாரம் வேணாம்னு சொல்றா

நான் : சரி நீங்க பண்ணிக்கிட்டா என்ன ??

தொடர்ந்து வாசிக்க…

பின் குறிப்பு : தற்சமயம் இதை விட சுவாரசிமான சரித்திர தொடர்களை நர்சிம், இளையபல்லவன், ஆகியோர் எழுதி வருகிறார்கள். அதே போன்ற சுவாரசியமான ஆய்வு தொடர்களை வாசிக்க ரத்னேஷ் (பகவத் கீதை), முரளி கண்ணன் (சினிமா), வக்கில் ராஜதுரை (சட்டம்) ஆகியோரின் பதிவுகளுக்கு செல்லுங்கள்.

* 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் – மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்க

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

முன்கதை வாசிக்க * 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் – ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும் செல்லவும்

ஒரு சுபயோக சுபதினத்தில் அங்கு பணிபுரிய எனக்கு மாற்றுப்பணி உத்தரவு வந்தது. உடன் எனக்கு பல அறிவுரைகள் “மருத்துவ விடுப்பு எடுத்து விடு”, “வேறு மாவட்டதிற்கு மாற்றல் வாங்கி விடு” என்ற பலரும் அறிவுறுத்தினார்கள்.

நானும் அந்த மாவட்டத்தில் சேர்ந்ததிலிருந்து அங்கு நடப்பதை கவனித்து வந்தேன். மேலும் கல்லூரி காலங்களில், வினாடிவினா, இசை, போன்ற பல போட்டிகளுக்கு சென்று வந்ததால் கொஞ்சம் தைரியம் அதிகம்.
சரி, என்னதான் நடக்கும், பார்த்துவிடுவோம் என்ற தைரியத்துடன் சென்று பணியேற்றுவிட்டேன்.

செல்லும் போதே அரசு பணியில் இருந்த மூத்தமருத்துவர்களில் (சீனியர்களிடம்) அவர்களின் அனுபவத்தை கேட்டு தெரிந்துகொண்டேன். அவர்கள் இது போன்ற சூழ்நிலைகளில் கடைபிடித்த நடைமுறைகளை பகிர்ந்து கொண்டனர். என்ன பிரச்சனைகள் அங்கு உள்ளன, தொல்லை தருபவர்கள் யார் போன்ற விபரங்களை விசாரித்து, அதை எல்லாம் எனக்கு முன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிந்த மருத்துவர்களிடம் கூறி அவர்கள் ஆலோசனையுடனே சென்றேன்.

ஆரம்ப சுகாதாரத்தில் பணியேற்று ஒரு வாரம் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் சென்று கொண்டு இருந்தது. அதன் பின் ஒரு நாள் காலையில் நம்ம கதாநாயகன் (இவரை க.நா.1 என்று அழைப்போம்) வந்தார். நான் புறநோயாளி பகுதியில் அமர்ந்து பிணியாளர்களை பரிசோதித்து கொண்டிருந்தேன். (இந்த குறிகளுக்கு உள் இருப்பது பேசப்பட்டது அல்ல)

க.நா.1 : வணக்கம் சார். நான் தான் ___________ நம்ம ஊரில் உள்ள _______ நற்பணி மன்றத்தின் செக்ரட்டரியா இருக்கேன்

நான் : வணக்கம். சொல்லுங்க

க.நா.1 : நீங்க புதுசா வந்துருக்கீங்கன்னு சொன்னாங்க. பாக்க வரனும்முன்னு நினைச்சேன். கலெக்டராபீசில வேலை. (வேற என்ன. மனு கொடுப்பது தான்) அதான் வர முடியல. நேத்து கூட கலெக்டர்ட பேசிட்டுத்தான் வரேன் (திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனு நீதி நாள் நடக்கும். யார் வேண்டுமென்றாலும் மாவட்ட ஆட்சித்தலைவரை சென்று பார்க்கலாம். நேரில் மனு அளிக்கலாம். குறைந்தது 250 முதல் 300 பேர்கள் வரை அளிக்கும் மனுக்களை வாங்கி அனைவரிடமும் புன்னகைப்பது என்பது இ.ஆ.ப வேலையின் ஒரு பகுதி)

நான் : சொல்லுங்க. என்ன விஷயம். நானும் உங்களை பாக்கனும்னு நினைச்சிட்டிருந்தேன்
க.நா.1 : நம்ம பின்னாடி ஒரு 400 பசங்க இருக்காங்க. உங்களுக்கு என்ன ஹெல்பு வேணும்னாலும் கேளுங்க. கண்டிப்பா பண்ணலாம். நம்மாள முடியாததுன்னு ஒன்னுமே கிடையாது

நான் : நான் சொல்ல வந்ததும் இதுதான். இந்த ஆஸ்பத்திரி (ஆரம்ப சுகாதார நிலையங்களையும் ஆஸ்பத்திரி என்று தான் கிராமப்புறங்களில் அழைப்பது வழக்கம்) கட்டி 30 வருஷத்திற்கு மேல ஆச்சு
க.நா.1 : ம்ம்ம்

நான் : ஆனா பாருங்க ஒரு காம்பவுண்ட் கூட கிடையாது.
க.நா.1 : ஆமா சார். யாருக்குமே அக்கரை கிடையாது

நான் : அதான். நீங்க ஒரு காம்பவுண்ட் கட்டி தரலாம்ல
க.நா.1 : ……. (திருட்டு முழி முழிக்கிறார்) (வாயா வா.. இப்படி உன்னை முழிக்க வைக்கத்தானே 2 வாரம யோசித்து ஒரு திட்டத்துடன் வந்தேன்)

நான் : நீங்க வராட்டா கூட நானே உங்கள வந்து பாக்கலாமுன்னு இருந்தேன். சாயாங்காலம் சர்வேயர வரச்சொல்லி இருக்கேன். அவர் வந்து அளந்து ”பொழி” (நில அளவு குறித்த வட்டார வழக்கு) பாத்து குச்சி அடிச்சிட்டாருன்னா (நிலம் அளந்த பின், அந்த எல்லை தெரிய சிறு மரக்குச்சிகளை நிலத்தில் நட்டி வைப்பது) நீங்க வேலை ஆரம்பிச்சிரலாம்

க.நா.1 : அது சரி சார், கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு நாங்க எப்படி காம்பவுண்ட் கட்ட முடியும். அது கவர்மெண்ட தானே கட்டனும். நான் வேனும்னா நம்ம கலக்டர் சார்ட பேசட்டா (வேறு ஒன்றும் இல்லை. அடுத்த திங்கள் மனு அளிப்பது தான்)

நான் : பேசுங்க. ஆனா அது பெரிய விஷயம். கலெக்டர் சார் அதை சென்னைக்கு அனுப்பி, அது பல இடங்களுக்கு போகும். உடனே வேலை நடக்காது

க.நா.1 : இல்லை . நாங்க கட்டி தந்தா அத கவர்மெண்ட ஒத்துக்காதே (புத்திசாலி என்று நினைப்பு !!!)

நான் : அதெல்லாம் இல்லை. யார் வேண்டும்னாலும், நிலம், கட்டிடம், உபகரணங்கள், வாகனங்கள் நன்கொடை தரலாம். நீங்க காம்பவுண்ட் சுவர் கட்டித்தாரீங்க அவ்வளவுதான்

க.நா.1 : சரி சார். நான் யோசித்து விட்டு சொல்றேன்

நான் : என்ன சார் யோசிக்க இருக்கு. உங்க ஊர். உங்க ஆஸ்பத்திரி. நீங்க தான் ஊரில பெரிய மனுஷன் (அப்படி போடு அருவாள) நீங்க கட்டாம யார் கட்டுவா காம்பவுண்ட. அதுவும் உங்க பின்னாடி 400 பேர் வேற இருக்காங்க

க.நா.1 : …..(மீண்டும் திருட்டு முழி)
நான் : என்ன யோசனை.
க.நா.1 : நான் நம்ம பசங்க கிட்ட கேட்டுகிட்டு சொல்றேன் சார்

நான் : சரி. கேட்டுக்கோங்க. சாயங்காலம் 4 மணிக்கு வாங்க. சர்வேயர் வரார்
க.நா.1 : இல்ல இல்ல…. அவர பெரகு வரச்சொல்லுங்க. நான் மத்தவங்கிட்ட கேட்டுகிறேன்

நான் : சரி கேட்டுக்கோங்க

அதன் பிறகு ஒரு வாரம் நிம்மதியாக கழிந்தது.

ஒரு வாரம் கழித்து நம் கதாநாயகன் வந்தார். கூடவே நாலைந்து பேர். (தனியா வந்து பேசத்தெரியாம மாட்டிய அனுபவம் போலிருக்கிறது)

க.நா.1 :சார், நம்ம பசங்க கிட்ட எல்லாம் பேசுனோம். அவங்க காம்பவுண்ட் கட்ட பணம் நிறைய ஆகுமுன்னு சொல்றாங்க

நான் :கண்டிப்பா ஆகும். ஆனா உங்களால முடியாததா. நீங்க தான் இந்த ஊர்ல பெரிய மனுசன்னு சொன்னாங்க. எப்பவும் ஆஸ்பத்திரிலேயே இருக்கீங்க. நீங்க தானே பண்ணனும், நீங்க தனியாவா பண்ணுறீங்க. இவங்கல்லாம் இருக்காங்கல தனியா பண்ணிணாதான் கஷ்டம். இவங்களும் உங்க கூட தானே இருக்காங்க (கூட வந்தவர்கள் பார்த்த பார்வையிலிருந்து அடுத்த முறை அவர்கள் துனைக்கு வரமாட்டார்கள் என்று தெரிகிறது)

க.நா.1 :அது வந்த வெள்ளாம சரியில்ல. (வயல் விளைச்சல் சரியில்லை) அதான் பணம் புரட்டுறது கொஞ்சம் கஸ்டம். நாம வேணும்முன்னா அடுத்த வருசம் பாக்கலாமே

நான் :என்னங்க நீங்க. நீங்க தானே முக்கியமான ஆளு. நீங்க பண்னாம யாரு பண்ணுவா. இப்படி சொன்னா எப்படி

இதற்குள் அவர்களுக்குள் சைகை காட்டி வெளியில் சென்று விட்டனர். நான் மேலும் சில நோயாளிகளை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு 15 நிமிடம் கழித்து மீண்டும் அறைக்குள் வந்தனர்

க.நா.1 :சார், நம்ம பசங்க என்ன சொல்றாங்கனா, காசு கொடுக்கிறது கஷ்டம். ஆனா ஆஸ்பத்திரிக்காக வேலை எவ்வளவு வேணும்மினாலும் பாக்கலாம். என்னயா, நான் சொல்றது கரெக்டா

அனைவரும் வேக வேகமாக தலையாட்டுகிறார்கள்

நான் :உங்களாக தினமும் எவ்வளவு நேரம் இங்க இருக்க முடியும்

அனைவரின் முகத்திலும் “பல்பு” எரிகிறது. பிறகு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பிரச்சனை பண்ணுவது தானே அவர்களின் முக்கிய வேலை

க.நா.1 : மத்தியானம் பூரா இங்கதான் சார் இருப்போ்ம்
நான் :சரி அப்ப நீங்க காசு தர வேண்டான். ஒரு வேள பாத்தா போதும்

க.நா.1 :சொல்லுங்க சார் என்ன வேலை
நான் : வானம் தோண்டுறது தான் (கட்டிடங்களின் அஸ்திவாரத்திற்காக நிலத்தில் குழி தோண்டுவது)

மெதுவாக திகைத்து பராக்கு பார்த்தவர்கள் அனைவரும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கிறார்கள்

க.நா.1 :??
நான் :சர்வேயர கூப்பிடு பொழி பாத்து குச்சி அடிச்சிரலாம். நீங்க எப்ப இங்க வர்றீங்களோ அப்ப கொஞ்ச கொஞ்சமா தோண்டுனா போதும்

க.நா.1 :கல், சிமெண்ட் எல்லாம்
நான் :வானம் தோண்டி அத போட்டோ எடுதது அனுப்புனா , ஸ்டெர்லைடுல அல்லாட்டி ஸ்பிக்ல கல் வாங்க காசு தருவாங்களாம். அத் வச்சு கட்டிறலாம் (ஸ்டெர்லைட், ஸ்பிக் ஆகியவை அங்குள்ள தனியார் நிறுவனங்கள்)

க.நா.1 கூட வந்தவர்களில் ஒருவர் : அப்ப நாங்க தான் தோண்டனுமா
நான் : (எலி பொறியில் மாட்டியது என்று தெரிந்தவுடன்) இத பாருங்க. நீங்க உங்க வேலய போட்டுகிட்டு ஆஸ்பத்திரிக்கு வேல பாக்க வேணாம். மத்தியாணம், வேல் இல்லாட்ட ஆடு புலி ஆடுற நேரத்துல கொஞ்சம் மம்மட்டி, கடப்பாற புடிச்சா ஒரு 3 வாரத்துல முடிச்சிரலாம். . கொஞ்ச எல்லாரும் வாங்க காட்றேன்

என்று கூறி அப்படியே சுகாதார நிலைய கட்டிடத்தின் வெளிப்புறம் அழைத்து சென்று “அங்கிருந்து இது வரை” “இதிலிருந்து அது வரை” என்று காட்டினேன்.  அந்த வளாகத்தின் மொத்த அளவு 10 ஏக்கர். அப்படி என்றால் சுற்று சுவர் கட்ட வேண்டிய நீளம் எவ்வளவு பெரிது என்று எண்ணிக்கொள்ளுங்கள். சுட்டியை சுட்டினால் உங்களுக்கு அந்த ஆரம்ப சுகாதார நிலைத்தையும் அதன் அருகிலுள்ள பிற இடங்களையும் வானிலிருந்து உங்களுக்கு பிடித்தமான உயரத்தில் இருந்து காணலாம்

அப்படியே அவர்களை பின்னால் அழைத்து சென்று சமையல் மற்றும் நீர் தொழிலாளியிடம் சென்று (cook cum washer woman) ”இவங்களாம் நம்ம ஆஸ்பத்திரிக்கு காம்ப” என்று வார்த்தையை முடிக்கும் முன்னர்….ஒருவர் குறுக்கிட்டு “இல்லை இல்லை. வானம் தான் தோண்டுறோம்” என்று அவசரமாக கூறி்னார்

நான் :அதான் இவங்க எப்ப வந்தாலும் அந்த கடப்பாரயும் மம்மட்டியும் கொடுத்துருங்க (கடப்பாரை, மண்வெட்டி)
சமையல் மற்றும் நீர் தொழிலாளி :(அரண்டுபோய்) சரி சார்

க.நா 1 : சரி சார், எனக்கு மணியாச்சில ஒரு சோலி இருக்கு. போயிட்டு வந்துட்றேன் (நீங்கள் திருநெல்வேலி, நாகர்கோயிலுக்கு தொடர்வண்டியில் செல்லும்போது வருமே அதே வாஞ்சி மணியாச்சிதான்)
நான் : சரிங்க. எப்ப வேணும்னாலும் வாங்க. என்ன பாக்க வேண்டாம். நீங்களே வேலைய ஆரம்பிக்கலாம்

அதன் பிறகு அந்த கூட்டத்தை நெடுநாள் கழித்தே பார்த்தேன் என்றும் அதுவும் அவர்களுக்கு எதாவது உடல் நலக்குறைவு என்றால் மட்டுமே வந்தனர் என்றும் சொல்லவும் வேண்டுமா.

ஆரம்ப சுகாதார நிலையமும் எந்த பிரச்சனையும் இல்லாம்ல் சென்று கொண்டிருந்தது. இப்படியாக ஒரு கும்பலை விரட்டிய செய்தி மெதுவாக பரவியிருக்கும் என்று நினைக்கிறேன்.

இதற்கும் நண்பர்களுடன் கூடி பேசி (அடுத்த கும்பலை பற்றிய விபரங்களை சேகரித்து) அவர்களுக்கு ஏற்ற மேலும் சில திட்டங்களை த்யாரித்து வைத்திருந்தோம்

முதல் கும்பல் சுகாதார நிலையம் பக்கம் தலை வைப்பதில்லை என்று தெரிந்த சில வாரங்களில் அடுத்த கும்பலிலிருந்து சிலர் வர ஆரம்பித்தனர். ஆனால் அலம்பல் செய்ய வில்லை.

பிறகு ஒரு நாள் அந்த அடுத்த கோஷ்டி தலைவர் வந்தார். அவரை நாம் கதாநாயகன் 2 (க.நா.2) என்று அழைப்போம்

தொடர்ந்து வாசிக்க…

* 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் – ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும்

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

கப்பலோட்டிய தமிழனின் வட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த மருத்துவரும் நிம்மதியாக பணிபுரிய முடியாது.

காரணம் ஊரில் இரு குழுக்கள். இரு குழுவிலும் வேலை வெட்டியில்லாத சுமார் 10 நபர்கள். இவர்களின் வேலை என்னவென்றால் ஒரு மருத்துவர் அங்கு வேலைக்கு சேர்ந்த உடன், ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே வந்து பழகுவுது போல் பழகுவது. அதன் பின் அங்கேயே உட்கார்ந்து கொண்டு “அவருக்கு ஊசி போடுங்கள்”, “நம்ம அண்ணனுக்கு க்ளுகோஸ் ஏற்றுங்கள்” என்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் செட்டிலாகி விடுவது. மதியம் அங்குள்ள பணியாளர் விடுதியில் ஆடுபுலிஆட்டம் ஆடுவது (ஏனோ சீட்டு, ரம்மி அந்த குழுவில் அவ்வளவு பிரபலம் இல்லை) என்று கச்சேரியை ஆரம்பித்து விடுவார்கள்

அதன் பின் அடுத்த கோஷ்டி ஆரம்ப சுகாதார நிலையம் பற்றியும் மருத்துவ அலுவலர் பற்றியும் புகார் மேல் புகார் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். சுகாதார பணிகள் துனை இயக்குனரில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் வரை அனுப்பபடும் புகார்களின் நகல்கள், சுகாதார செயலர், சுகாதார அமைச்சர், தலைமைச்செயலர், முதலமைச்சர், குடியரசுத்தலைவர் வரை செல்லும். (அவருக்கு தமிழ் புரியும். அனுப்புடா !!) அப்பொது அப்துல் கலாம் குடியரசுத்தலைவர்.. ஒரு தமிழர் குடியரசுத்தலைவரானால் என்னென்ன புகார் மனு எல்லாம் பெற வேண்டியுள்ளது பாருங்கள்.

உடன் அந்த மருத்துவர் மீது விசாரணை வைக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பெறும்பாலும் மருத்துவ இளங்கலை (MBBS) படித்து முடித்த உடன் பணியில் சேர்ந்திருப்பவர்கள். புகாரை பார்த்தவுடன் வீட்டில் புலம்பி அடுத்த நிலையத்திற்கு மாற்றலாகி சென்று விடுவார்கள். அந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 1500 இடங்கள் காலியாக இருந்தன. (இன்று 100 இடங்கள் கூட காலியில்லை) மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்யாமல் அங்கிருந்து ஓடுவதற்கு முக்கிய காரணம் அங்குள்ள நிர்வாக பணி, கடைநிலைய ஊழியர்களின் பிரச்சனை, மற்றும் இது போல் சில இடங்களில் ஊரில் உள்ள வெட்டிபயல்கள் கிளப்பும் பிரச்சனைதான்.



அந்த மருத்துவர் மாற்றலாகி சென்ற உடன் அடுத்த மருத்துவர் வருவார். அவர் முதல் குழு மேல் எச்சரிக்கையுடன் வருவதால் அந்த குழுவை தள்ளி வைப்பார். இது தான் நேரம் என்று அடுத்த குழு உள்ளே புகுந்து விடும். பிறகென்ன, ”பழைய குருடி கதவை திறடி” கதைதான். இந்த குழு அதே போல் இம்சை அளிக்கும். இந்த முறை முதல் குழு புகார் அளிக்கும். (இந்த புகாரும் குடியரசு தலைவர் மாளிகை வரை செல்லும்) அந்த மருத்துவரும் ஓடி விடுவார்.

அது சரி, மருத்துவர் ஏன் இப்படி வெட்டி பயல்களுடன் பேச வேண்டும். மருத்துவமனையில் அமர்ந்து வருபவர்களை சோதித்து ஊசி, மாத்திரை எழுதினால் போதாதா என்ற கேள்வி உங்களுக்கு வருவது நியாயம் தான்.
அரசு மருத்துவமனைகள் (மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை), போன்ற மருத்துவமனைகளுக்கு இரு பணிகள் தான் – புறநோயாளி சிகிச்சை, உள்நோயாளி சிகிச்சை (இதில் அறுவை சிகிச்சை அடக்கம்). மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் வேலை பார்ப்பவர்கள் கூடுதல் பணியாக மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும். மற்றும் நீதிமன்றப்பணி, முகாம்கள், சிறப்பு பணிகள் என்று இருந்தாலும் அவை எல்லாம் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் பணிகள் தான்

ஆனால் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணிகள் பல. அதில் உள்ள பிற பணிகளுடன் ஒப்பிடுகையில் புறநோயாளி சிகிச்சை என்பது முக்கியத்துவம் குறைந்த பணிதான். (அதாவது பிற பணிகள் மிக மிக முக்கியம் என்ற அர்த்தத்தில்) குடும்ப நலம், தடுப்பூசி, சுகாதாரம், காச நோய் தடுப்பு, தொழுநோய் தடுப்பு, ஏய்ட்ஸ் தடுப்பு, பல்ஸ் போலியோ, பள்ளி சிறார் நலம், ஆய்வுப்பணி, திருவிழா நேரங்களில் தொற்று நோய் பரவாமல் தடுப்பது என்று பல பணிகள் உண்டு – இதை செய்வதற்கு பல பயிற்சிகள் தேவை. இதனால் தான், எந்த பயிற்சியும் பெறாத மருத்துவர்களை வெறும் நான்கு மாதம் வரை 8000 ஊதியத்தில் நியமிக்கும் திட்டத்தை கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் உட்பட அனைவரும் கடுமையாக எதிர்த்தார்கள்.

எனவே இப்படி பலதரப்பட்ட பணிகளுக்காக ஊர் மக்களுடன் நெருங்கி பணிபுரிய வேண்டும். களத்தில் மருத்துவர் இல்லையென்றால் (புறநோயாளிகளுக்கு ஊசி போடுவதை தவிர) ஒரு வேலையும் நடக்காது. ஆனால் அப்படி மருத்துவர் ஊர் மக்களுடன் பழகுவது கவனமாக செய்ய வேண்டும். அவர் ஒரு சாரார் உடன் பழகுகிறார் என்று அடுத்த சாரார் நினைத்தால் பிரச்சனை தான்.

அதுவும் ஏற்கனவே குழுமனப்பாண்மையால் இரண்டு பட்டிருக்கும் ஊரில் இது போல் பிரச்சனை எளிதில் பெரிதாகி விடும். உதாரணமாக காச நோய்க்கு மருந்து சாப்பிடும் நோயாளி மருந்து ஒழுங்காக சாப்பிடுகிறாரா என்று சோதிக்க மருத்துவர் கள ஆய்வு சென்றால் அங்குள்ள ஏதேனும் இரண்டு நோயாளிகளை பார்த்தால் போதும் என்று காச நோய்திட்ட குறிப்புகள்/ வழிமுறைகள் சொன்னாலும், ஒரே குழுவை சேர்ந்த இரு நோயாளிகளை பார்த்து விட்டு அடுத்த குழுவை சேர்ந்தவர்களை பார்க்காவிட்டால் பிரச்சனைதான். மருத்துவரை ஒரு குழுவிற்கு ஆதரவளிப்பவராக கருதி அடுத்த குழு அவரை தொந்தரவு படுத்த ஆரம்பிக்கும்.

சரி ஒவ்வொரு குழுவில் ஒருவரை பார்த்து விட்டு வரலாம் என்றால், முதல் வீட்டின் ‘கலர்’ குடித்திருந்தால், அடுத்த வீட்டிலும் கண்டிப்பாக குடிக்க வேண்டும். ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன் என்று நாகரிகமாக மறுத்தால் பிரச்சனை 🙂 🙂

இப்படியாக எப்படியோ ஒரு மருத்துவர் ஒரு குழுவிற்கு நெருக்கமானவர் என்று பெயர் வந்து விட்டால் (இப்படி பெயர் வருவது என்பது அவர்களின் திட்டமிட்ட செயலாக இருக்காது – இதில் பெரிய கொடுமை என்னவென்றால் பல இடங்களில் இரண்டு குழுவுமே ஒரே ஜாதியாகத்தான் இருக்கும் – பல மருத்துவர்களுக்கு என்ன நடக்கிறதென்றே தெரியாது) அதன் பிறகு தலைவலி தான்.

சில இடங்களில் இந்த பிரச்சனை குறைவு. நான் சொன்ன ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த பிரச்சனை அதிகம்.இப்படி தொடர்ந்து மருத்துவர்கள் தொல்லைக்கு உள்ளாவதால், அங்கு யாரும் பணி புரிவதில்லை. தமிழகத்தில் கடந்த வருடங்களில் சுமார் 4000 மருத்துவர் பணியிடங்கள் வரை காலியாக இருந்ததால், (ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே 1500 காலியிடங்கள் இருந்தன) மாற்றல் பெறுவது சிரமமே இல்லை. (இன்று – 18/10/2008 நிலவரப்படி – ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 100 காலியிடங்களும், அரசு மருத்துவமனைகளில் சுமார் 30 காலியிடங்களும், மருத்துவக்கல்லூரிகளில் சுமார் 2000 காலியிடங்களும் உள்ளன. அதில் அடுத்த மாதம் 200 + 100 காலியிடங்கள் அரசு தேர்வாணைய காத்திருப்பு பட்டியலிலிருந்து நிரப்பப்பட உள்ளன.)

எனவே 3 மருத்துவர் பணி புரிய வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருவருமே கிடையாது. அந்த மாவட்டத்தின் பிற சுகாதார நிலையங்களிலிருந்து மாற்றுப்பணி மூலம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு் பணி நடந்து கொண்டிருந்தது.மாற்றுப்பணி மருத்துவர்களும் இப்படி இரண்டு குழுவில் ஏதோ ஒரு குழுவை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் நுழைய விட்டு விட்டால் (அடுத்த குழுவால்) தலைவலி ஆரம்பித்து விடும்.
இப்படி யான ஒரு சுபயோக சுபதினத்தில் அங்கு பணிபுரிய எனக்கு மாற்றுப்பணி உத்தரவு வந்தது

தொடர்ந்து வாசிக்க…