மஞ்சள்காமாலை, ஈரல், பித்தப்பை கல் : Jaundice, Liver, Gall Bladder Stone

மஞ்சள்காமாலை, ஈரல், பித்தப்பை கல் : Jaundice, Liver, Gall Bladder Stone

“ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு சித்த மருத்துவம், நோய் முற்றினால் நவீன மருத்துவம்” என்பதன் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் நோய் முற்றிய பிறகு அதை சரி செய்யும் வாய்ப்பு குறைவு.

மஞ்சள்காமாலை, ஈரல், பித்தப்பை கல் : Jaundice, Liver, Gall Bladder Stone
மஞ்சள்காமாலை, ஈரல், பித்தப்பை கல் : Jaundice, Liver, Gall Bladder Stone

எனவே, எந்த நோய் என்றாலும், டெங்கு என்றாலும், கொரோனா என்றாலும், மஞ்சள்காமாலை என்றாலும் ஆரம்ப நிலையிலேயே நவீன விஞ்ஞான மருத்துவம் பார்த்தால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகம்.

மஞ்சள் காமாலையும் மஞ்சள் பத்திரிகைகளும் தவிர்க்க வேண்டிய மரணங்களும்
**********************************************************************************

உங்கள் கணினி திரையில் ஒன்றும் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். (நோய்க்குறி)
இது பல காரணங்களினால் (நோய்கள்) வரலாம்.

  1. திரையில் தவறு / கோளாறு / பிரச்சனை
  2. திரைக்கும் கணினிக்கும் இடையில் இணைக்கும் கம்பியில் (கேபிள்) தவறு / கோளாறு / பிரச்சனை
  3. கணினியில் தவறு / கோளாறு / பிரச்சனை

இது போல் பல காரணங்களினாலும் திரையில் ஒன்றும் தெரியாது.  திரையில் ஒன்றும் தெரியவில்லை என்றால் அதற்கு ஒரே தீர்வுதான் என்றால் நம்புவீர்களா

ஆனால்

கழுதை விட்டையை ஆட்டின் சிறுநீரில் கரைத்து ஒவ்வொரு நாழிகையும் ஏழு சொட்டு சாப்பிட்டால் அனைத்து வித காரணங்களினால் வரும் மஞ்சள் காமாலையும் தீர்ந்து விடும் என்று யாராவது மஞ்சள் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ, சமூக ஊடகங்களிலோ எழுதினால் அதை அப்படியே நம்பி “மிக்க நன்றி” என்று பதில் கூறும், அந்த தகவல்களை பகிரும், மேலனுப்பும் புத்திசாலிகள் நிறைய பேர் உள்ளனர்

-oOo-

மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு நோய்க்குறி. இரத்தத்தில் பிலிரூபின் என்ற வேதிப்பொருள் அதிகரிப்பதால் ஏற்படும் நிலை தான் மஞ்சள் காமாலை.

ஒரு நோய்க்கு பல நோய்க்குறிகள் இருக்கும்.
ஒரு நோய்க்குறி பல நோய்களுக்கு இருக்கும். (பலவித காரணங்களினால் திரையில் படம் தெரியாமல் இருக்கலாம்)

இதனால் தான் மூடநம்பிக்கை மருத்துவ முறைகள் மற்றும் ஏ“மாற்று” நோய்குறிகளையே நோயாக கருதி தவறான சிகிச்சை அளித்து மக்களை கொன்றுவிடுகின்றன

-oOo-




இப்பொழுது மஞ்சள் காமாலைக்கு வருவோம்

அதற்கு முன் கொஞ்சம் அடிப்படை மருத்துவம் பயிலலாம்.

இரத்ததில் சிவப்பணுக்களும் வெள்ளை அணுக்களும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

இதில் சிவப்பணுவினுள் (Red Blood Cells – RBC) உள்ள ஹீமோகுலோபின் (Hemoglobin) என்ற பொருள் தான் பிராண வாயுவை (Oxygen) நுரையீரலிலிருந்து உடலின் பிற இடங்களுக்கு கொண்டு செல்கிறது. சிவப்பணுக்கள் சாகா வரம் பெற்றவை அல்ல. அவை ஒரு குறிப்பிட்ட காலம் பணி செய்த பின் இறந்து விடுகின்றன. அப்படி மரணித்த சிவப்பனுவினுள் உள்ள ஹீமோகுலோபின் சில வேதியியல் மாற்றங்களால் பிலிரூபின் (Bilirubin) என்ற பொருளாகிறது. இதை எதனுடனும் இணைக்கப்படாத பிலிரூபின் (Unconjugated Bilirubin) என்று அழைக்கிறார்கள்

இந்த பிலிரூபின் என்பது உடலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய பொருள். ஆனால் இணைக்கப்படாத பிலிரூபின் என்பது நீரில் கரையாத பொருள் (Water Insoluble) எனவே சிறுநீரகங்களால் இந்த இணைக்கப்படாத பிலிரூபினை அதிக அளவில் வெளியேற்ற முடியாது. கொஞ்சம்தான் வெளியேரும்.  இதற்கு நமது உடலில் ஒரு அருமையான ஏற்பாடு உள்ளது. ஈரலில் (கல்லீரல் / Liver) இந்த பிலிரூபினானது குலுக்குரோனிக் அமிலத்துடன் சேர்ந்து (Glucuronic Acid) இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது  (Conjugated Bilirubin) இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினனை சிறு நீரகங்கள் முழுமையாக வெளியேற்றி விடும்.

ஆகவே இரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுலோபினிலிருந்து பிலிரூபின் வருகிறது. இந்த இணைக்கப்படாத பிலிரூபின் இரத்தத்தில் இருக்கிறது. இது மஞ்சள் நிறப்பொருள். இது ஈரலில் இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது. இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினானது ஈரலிலிருந்து பித்தநீருடன் (பைல்) சேர்ந்து பித்த நாளங்கள் வழியாக (பைல் டக்ட்) இரைப்பை (டியோடினம்) வருகிறது. இதில் ஒரு பங்கு சிறுகுடலில் இருந்து இரத்ததிற்கு சென்று சிறுநீரகத்தினால் வெளியேற்றப்படுகிறது. ஒரு பங்கு மலத்துடன் வெளியேற்றப்படுகிறது. இதனால் தான் மலம் மஞ்சள் நிறமாக உள்ளது

இது தான் நமது உடலில் தினமும், ஏன் ஒவ்வொரு வினாடியும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்

-oOo-

வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஹீமோகுலோபின் உடைந்தால்

  1. அதிக அளவு பிலிரூபின் உருவாகிறது.
  2. இதில் ஒரு பகுதி இணைக்கப்பட்ட பிலிரூபினாகிறது
  3. மீதி இணைக்கப்படாத பிலிரூபினாக இரத்தத்தில் உள்ளது.
  4. இணைக்கப்படாத பிலிரூபின் அதிக அளவில் சிறுநீரில் வெளியேறுகிறது. எனவே சிறுநீர் வழக்கமான நிறத்திலேயே இருக்கும். அதாவது நிறமல்லாமல். இதனால் இந்த வியாதியை நிறமல்லா சிறுநீர் மஞ்சள் காமாலை என்றும் அழைக்கலாம் (acholuric jaundice)

இந்த வியாதியை ப்ரீ ஹெபாடிக் ஜாண்டிஸ் (Pre hepatic Jaundice – அதாவது பிலிருபீன் வழக்கமாக செல்லும் பாதையில் ஈரலுக்கு முன்னர் கோளாறு உள்ளது) என்று அழைப்பார்கள். பொதுவாக இரத்த அணுக்கள் அதிகம் உடைபடும் வியாதிகளில் (ஹீமோலைடிக் டிஸாடர் – hemolytic disorders) இந்த வகை மஞ்சள் காமாலை வரும். இந்த வகை மஞ்சள் காமாலைக்கு வைத்தியம் பார்க்க முதலில் இரத்த சிவப்பணுக்கள் உடைபடுவதை தடுக்க வேண்டும். கீழா நெல்லி உதவாது.

கீழா நெல்லி மட்டும் சாப்பிட்டாலோ, சூடு போட்டாலோ, இயற்கை வைத்தியம் என்றால் பெயரில் ஊரை ஏமாற்றும் மோசடி நபர்கள் கூறும் சிகிச்சைகளை எடுத்தாலோ மரணம் தான்

-oOo-




ஈரல் வேலை செய்யாவிட்டாலோ அல்லது வழக்கத்திற்கு குறைவாக வேலை செய்தாலோ

  1. வழக்கமான அளவில் உருவாகும் பிலிரூபின் இரத்ததில் தேங்குகிறது
  2. சிறுநீரில் அதிக அளவு இணைக்கப்படாத பிலிரூபின் வெளியேறுகிறது.

இந்த வகை வியாதிகளை ஹெபாட்டிக் ஜாண்டிஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது பிரச்சனை ஈரலில் உள்ளது.

ஈரலில் என்ன பிரச்சனை என்றால்

  1. வேதியல் பொருட்களால் இருக்கலாம்.
  2. சில வகை மருந்து பொருட்களால் இருக்கலாம்.. முக்கியமாக – பக்க விளைவுகள் இல்லை என்று பொய் சொல்லி (அல்லது அறியாமல் சொல்லி) விற்கப்படும் / அளிக்கப்படும் சித்தா, ஆயுர்வேதா, யூனானி, ஹோமியோமதி மருந்துக்களில் பல ஈரலையும் சிறுநீரகத்தையும் நாசம் செய்ய வல்லவை. பக்க விளைவு இல்லாத மருந்து எதுவும் கிடையாது
  3. ஆட்டோ இம்யூன் டிஸார்டர் – உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது உடலுக்கு எதிராக செயல்படும் விநோத, வேதனை நிகழ்வு இது. அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி நோய்கிருமிகளை மட்டும் அழிக்காமல் உடலையும் அழித்து விடும். சில நேரங்களில் நோய்கிருமிகளுக்கு பதில் உடல் திசுக்களை மட்டும் அழித்துவிடும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆஸ்துமாவுக்கும் இது தான் காரணம்.
  4. கிருமிகளினால் இருக்கலாம்

கிருமிகள் என்றால்

  1. பேக்டிரியா
  2. வைரஸ்
  3. பங்கஸ்
  4. பூச்சிகள், புழுக்கள்

இதில் முக்கியமாக வைரஸ் என்று பார்த்தோம் என்றால் அதில்

  1. பிற நோய்களை உருவாக்கும் (அதே நேரத்தில் ஈரலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்) வைரஸ்கள்
  2. முக்கியமாக ஈரலை மட்டும் தாக்கும் வைரஸ்கள்

இந்த இரண்டாவது முக்கியமாக ஈரலை மட்டும் தாக்கும் வைரஸ்களளில் 7 வகைகள் உள்ளன

  1. ஹெபடைட்டிஸ் A
  2. ஹெபடைட்டிஸ் B
  3. ஹெபடைட்டிஸ் C
  4. ஹெபடைட்டிஸ் D
  5. ஹெபடைட்டிஸ் E
  6. ஹெபடைட்டிஸ் F
  7. ஹெபடைட்டிஸ் G

இது போன்ற ஈரல் பாதிப்பினால் வரும் மஞ்சள் காமாலை நோய்கள் பெரும்பாலும் ஹெபடைட்டிஸ் A வைரஸ் கிருமியினாலேயே வருகின்றன. எனவே இது தானாகவே சரியாகிவிடும். கொஞ்ச நாட்களுக்கு எண்ணை மற்றும் கொழுப்பு சத்து அதிகம் இல்லாத உணவை சாப்பிட்டால் போதும்.

அது போல் சூடு போடுவதால் இது சரியாவதில்லை

கீழா நெல்லி என்பது இந்த நோய்க்கு (வைரஸ்) மருந்து அல்ல. அது ஈரலை விரைவில் குணமடைய வைப்பதாக நம்பப்படுகிறது

கீழா நெல்லி குறித்து பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அவை உடலுக்கு (அதிக அளவில்) தீங்கு விளைவிப்பதில்லை என்று கண்டுபிடித்து உள்ளார்கள். (மற்ற சித்த, ஆயூர்வேத மருந்துகள் இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்படாமலேயே பக்க விளைவுகள் இல்லை என்று பொய் சொல்லப்படுகிறது)

இதில் ஹெபடைட்டிஸ் A வைரஸ் கிருமிகளினால் வரும் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை தேவையில்லை
தானாக சரியாகிவிடும்
இந்த தானாக சரியாகும் மஞ்சள்காமாலைக்குத்தான் சிகிச்சை அளிப்பதாக கூறி ஊரை ஏமாற்றும் கும்பல் பணம் சம்பாதிக்கிறார்கள்

பிற வைரஸ்,
பேக்டிரியா
வைரஸ்
காளான் – பங்கஸ்
பூச்சிகள், புழுக்கள்

மூலம் வரும் மஞ்சள் காமாலைக்கு நவீன மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்றால் மரணம் தான்

-oOo-




ஈரலிருந்து இரைப்பைக்கு பித்தம் வரும் வழியில் எதேனும் அடைப்பு இருக்கிறது என்றால் என்ன நடக்கும்

  1. வழக்கமான அளவில் உருவாகும் பிலிரூபின் வழக்கமாக செயல்படும் ஈரலினால் இணைக்கப்பட்ட பிலிரூபினாக மாற்றப்படுகிறது
  2. பித்த நீர் வழியாக வெளியேற முடியாத இணைக்கப்பட்ட பிலிரூபின் மீண்டும் இரத்ததில் சேறுகிறது
  3. இரத்ததில் அளவிற்கு அதிகமான இணைக்கப்பட்ட பிலிரூபின் உள்ளது
  4. சிறுநீரில் அதிக அளவு இணைக்கப்பட்ட பிலிரூபின் வெளியேறுகிறது. சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
  5. இரைப்பைக்கு பித்த நீர் வராததால், கொழுப்பு சத்து ஜீரனிக்கப்படுவதில்லை.
  6. எனவே மலத்தில் கொழுப்பு சத்து வெளியெறுகிறது
  7. மலம் வெள்ளை நிறமாக உள்ளது.

இது போன்ற நிலைமைகளை போஸ்ட் ஹெபாடிக் ஜான்டிஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது ஈரலிலிருந்து பிலிரூபின் வெளியேறியபின் பிரச்சனை. அதுவும் பெறும்பாலும் எதேனும் அடைப்பு.
இந்த அடைப்பு

  1. ஈரலுக்கு உள்ளும் இருக்கலாம் – இண்ட்ரா ஹெபாடிக் Intrahepatic
  2. ஈரலுக்கு வெளியிலும் இருக்கலாம் – எக்ஸ்ட்ரா ஹெபாடிக் Extrahepatic

அதே போல் இது (இந்த அடைப்பு )

  1. பிறக்கும் போதே இருக்கலாம் – கன்ஜெனிடல் Congenital
  2. பிறகு வந்திருக்கலாம் – அக்கொயர்ட் Acquired

இதில் 20 வயதிற்கு மேல் திடீரென்று ஒருவருக்கு மஞ்சள் காமாலை வந்து மலம் வெள்ளை நிறமாக அதிக கொழுப்புடன் வருகிறது என்றால் அதற்கு காரணம் எதோ அடைப்பு.

  • அது பித்த கற்களாகவும் (பைல் ஸ்டோன் Bile Stone) இருக்கலாம்
  • அல்லது புற்று நோயாகவும் (கான்ஸர் Cancer) இருக்கலாம்

முக்கியமான விஷயம், இது போன்ற நோய்களினால் வரும் மஞ்சள் காமாலை கீழா நெல்லி சாப்பிட்டாலோ அல்லது என்ன மருந்து சாப்பிட்டாலும் சரியாகாது. இதற்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதுவும் புற்று நோய் என்றால் ஆரம்ப கட்டத்திலேயே அறுவை சிகிச்சை செய்தால் தான் பிழைக்க முடியும்.

கல் அடைப்பு என்றால் அறுவை சிகிச்சை செய்த பிறகு பூரண குணமடையலாம்

மஞ்சள்காமாலை, ஈரல், பித்தப்பை கல் : Jaundice, Liver, Gall Bladder Stone
மஞ்சள்காமாலை, ஈரல், பித்தப்பை கல் : Jaundice, Liver, Gall Bladder Stone

-oOo-

சாராம்சம் 1 :

மஞ்சள் காமாலை ஒரு நோய் அல்ல. அது நோய் குறி
நோய் முதல் நாடி, எதனால் மஞ்சள் காமாலை வருகிறது என்று கண்டறிய வேண்டியது அவசியம்

அப்படி பட்ட மூல காரணங்ளில் சில காரணங்களுக்கு சிகிச்சை தேவையில்லை, தானாக சரியாகிவிடும்
அப்படி பட்ட மூல காரணங்ளில் சில காரணங்களுக்கு சிகிச்சை அவசியம்

சாராம்சம் 2 :

மஞ்சள் காமாலை எதனால் ஏற்படுகிறது என்று நவீன விஞ்ஞான மருத்துவ முறைகள் மூலமே கண்டுபிடிக்க முடியும்

மூட நம்பிக்கை மருத்துவர்கள், ஹீலர்கள் என்று ஊரை ஏமாற்றும் மோசடி பேர்வழிகள், இயற்கை மருத்துவம் முகமூடி அணிந்து கொள்ளும் சமூக விரோதிகள் ஆகியோர்களால் மஞ்சள் காமாலை ஏற்படும் காரணங்களை கண்டுபிடிக்க முடியாது. ஹெபடைட்டிஸ் A, leptospirosis, gall stones, prehepatic jaundice என்று அனைத்து நோய்களுக்கும் இந்த சமூக விரோத மோசடி பேர்வழிகள் ஒரே (பலனளிக்காத) வைத்தியம் மட்டுமே கூறுவார்கள்.

சாராம்சம் 3 :

சிகிச்சை தேவையில்லை, தானாக சரியாகிவிடும் காரணங்களினால் மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது என்றால் பிரச்சனையில்லை

சாராம்சம் 4 :

சிகிச்சை அவசியம் தேவைப்படும் காரணங்களினால் மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது என்றால் கண்டிப்பாக நவீன விஞ்ஞான மருத்துவத்தின் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்
இல்லை என்றால் நோய் முற்றி மரணம் ஏற்படலாம்

மஞ்சள் காமாலயில் மூன்றுவகை

1. நவீன அறிவியல் மருத்துவ சிகிச்சை எடுக்காவிட்டாலும் குணமாகிவிடும்
2. நவீன அறிவியல் மருத்துவசிகிச்சை எடுக்காவிட்டால் மரணம்
3. நவீன அறிவியல் மருத்துவசிகிச்சை எடுத்தாலும் மரணம்

இந்த முதல் வகை மட்டுமே சித்த மருத்துவத்தில் குணமாகும்

-oOo-

நவீன விஞ்ஞான மருத்துவத்தின் மூலம் எளிதில் சரிபடுத்தக்கூடிய காரணங்களினால் ஏற்பட்ட மஞ்சள் காமாலை நோய்க்கு
முறையாக சிகிச்சை எடுக்காமல்
தவறான வழிகாட்டுதலின் பேரில் மோசடி நபர்களிடம் சிகிச்சை எடுத்து
சாதிக்க வேண்டிய வயதில் மரணமடையும் நபர்களை காப்பாற்ற

இது குறித்த சரியான தகவல்களை பரப்புவோம் . . .

மஞ்சள்காமாலை குறித்து தவறான தகவல்களை அளிக்கும் மஞ்சள் ஊடகங்களை புறக்கணிப்போம்